தேவையற்ற கணங்களில்
என் தாய்மை விழித்துக்கொள்கிறது
தலை கோதி முகம் தடவி
தொடை சாய்த்து சேர்த்தணைத்து
வேர்களுக்கெல்லாம் நீரூற்றினாலும்
பூ பறிக்கையில் சிறிது சதையும்
வழித்துக்கொண்டு வருகிறது
தெரிந்தே தொடரும்
பகிர்தலுக்கான ஆயத்தங்கள்
முழுதாய் நனைக்காத மழையின் குழைவில்
பெரிதாய் ஈர்ப்பில்லை
கேட்டவுடன் களைய துளியும் ஆர்வமில்லை
என் குழந்தை கிடைக்காதென அறிந்தும்
பிசுபிசுத்த கைகளை கழுவவில்லை
எனக்கு தெரியும்
இப்பொழுதொன்றும் அவசரமேயில்லை
உலகில் மிஞ்சிய கடைசி ஆணும்
வற்றும் கடலின் கடைசி தவலை நீரும்
தனக்காய் பறிக்கையில்
தாயுள்ளமாவது மண்ணாவது.