Monday, March 04, 2013

அதுவே கடைசி

கிளைகள் பரப்பிய பெருமரமாகத்தான் அறிந்திருந்தேன்
அத்தனை வளமாய்
பேராதிக்கமாய்
சலனமற்ற பார்வையோடு
கடந்துவிடமுடியாதபடியாய்.

இப்பொழுதும்
அங்கேயேதான் இருக்கிறது மரம்
எனினும் கடைசி பறவை
தன் கூட்டை சுமந்தபடி பறந்துச்சென்று
நாளாகிறது.

நீ

பருக தணியாத தாகம்
இறைக்கத் தீராத நீர்
கண்கள் கொள்ளாத ஆழ்கடல்
அள்ளி குறையாத கைமணல்
நினைத்து சலிக்காத காதல்
தீராத்தேடல்
உன் பிரியம்

வாசம்

நான் தூங்கிட்டேம்மா
இருளில் கன்னம் தடவுகிறாள் மகள்
உறங்கும் குழந்தைக்கு வாசமிருக்கிறது
இறைந்து விழுந்தோடும் அருவியின் வாசம்
குளிர் காய எரியும் மென் தீயின் வாசம்
தூறல் புகைத்த செம்மண் வாசம்
போலவே தீர்க்கமானது
உறங்கும் குழந்தையின் வாசம்
அம்மாவுக்கு தெரியும் நீ தூங்கவில்லை என்றதும்
சிரித்தபடியே உறங்கிப்போகிறாள்
கணங்கள் நகர்த்தாமல் விழித்துக்கிடக்கும் என்னை
தலை தடவி உறங்கச்செய்கிறது கடவுள்.
நான் அறியுமுன்னே
அறையெங்கும் பரவியிருக்கிறது அனிச்சைவாசம்.