Monday, December 21, 2009

தடையங்கள்



எப்படி தேடினாலும் கிடைப்பதில்லை சில தடயங்கள்.

காய்ந்த சருகுக்குவியலின் மேல்
சற்றுமுன் ஒரு இலை உதிர்ந்ததற்கோ

பூட்டிய பூங்காவின் ஊஞ்சல்களில்
குழந்தைகள் ஆடிவிட்டு போனதற்கோ

குறுஞ்செய்திகளில் தகித்து கழிந்த
மிரட்சியான இரவுகளுக்கோ

பின் அட்டை தெரிய கிடக்கும்
இப்புத்தகத்தை வாசித்து முடித்ததற்கோ

அடைக்கபட்டிருக்கும் கதவுகளேல்லாம்
முன்னெப்போதோ
விலாசமாய் திறக்கப்பட்டிருந்ததற்கோ

எந்த தடையங்களும் இருப்பதில்லை.

இருந்தும் அழிக்கவியலாமல் தேங்கிவிடுகின்றன

சில நினைவுகள்
சில தேதிகள்
சில குற்றவுணர்வுகள்

Wednesday, November 11, 2009

நான் மட்டும்

திருமாங்கல்யதாரணம் முடியும்வரை
அணையாமல் பாதுகாக்கவேண்டுமென எச்சரித்தபடி
காமாட்சி விளக்கை
கையில் கொடுத்தார்கள்

திரி நுனி வெளிச்சத்தையே
கூர்ந்தபடியிருக்கிறேன்
எல்லா புகைப்படங்களிலும்.

Monday, October 12, 2009

ஒரு மாறுதலுக்காய்..

குழந்தையின் இசைக்கருவியில்
விதம்விதமாய் மிருகங்கள்
பொத்தான்களை அழுத்துகையில்
அதனதன் குரலில் பாடும்

நிறங்களும் சப்தங்களும்
அவள் சின்ன விரல்களை
சலிக்காமல் ஈர்க்கும்

அவள் உறங்கியதும்
பொத்தான் களை ஒவ்வொன்றாய் கழற்றி
மாற்றி மாற்றி பொருத்தினேன்.

மாடு கனைப்பதையும் வாத்து குரைப்பதையும்
பார்க்க பயமாயிருக்கிறது.

சற்றுமுன் நடந்த விபத்து..

நிகழ்ந்த நொடியில்
வாகனங்கள் தேங்கத்துவங்கிவிட்டன

அடிபட்டவனை சுற்றி
ஆனவரை கூட்டம் சேர்ந்தது

அதிர்வலைகள் பரவி
என்னை வந்து சேர்ந்தபோது
இறந்துவிட்டான் என்றார்கள்

ஆம்புலன்ஸில் ஏற்றும்போது
பரிச்சயமில்லாத ஆடைகளை குறித்துக்கொண்டபின்
கண்ணாடி சில்லுகள் மேல் ஏற்றிய
என் வாகனத்தின் டயர் பழுதாகியிருக்குமோவென

கவலைப்படத் துவங்கினேன்.

அடையாளம்

வெளியூரில் இருக்கும் தாத்தாவை
மறந்துவிடாமல் இருக்க
தினம் புகைப்படம் காட்டி
பழக்குகிறாள் அம்மா

ஊருக்கு வந்தபோது
புகைப்படம் நடமாடுவதை கண்டு
மிரண்டதிர்ந்து அழுகிறது குழந்தை.