புதிய நாட்காட்டியின் தாள்களை
ஒவ்வொன்றாய் கிழித்துக்கொண்டிருந்த குழந்தை
இன்றை கடந்து நாளைகளை கிழிக்கத்துவங்கியதும்
மெல்ல புன்னகைக்கிறாள்.
Sunday, August 09, 2015
மாற்றம்
அமரர்களாகவே நிலைத்திடவேண்டி
தேவர்கள் துவங்கிய யாகத்தில்
செங்கற்கள் அடுக்கி விறகுகள் குவித்து
மாவிலையால் நெய் ஊற்றி
ஓங்கி வளர்ந்த அக்னிதேவனுக்கு
ஒரு சீப்பு வாழைப்பழத்தையும்
பட்டுப் புடவையொன்றையும்
லாவகமாய் படைத்த நொடியில்
தேவர்கள் அசுரர்களாக மாறிவிட்டார்கள்.
தேவர்கள் துவங்கிய யாகத்தில்
செங்கற்கள் அடுக்கி விறகுகள் குவித்து
மாவிலையால் நெய் ஊற்றி
ஓங்கி வளர்ந்த அக்னிதேவனுக்கு
ஒரு சீப்பு வாழைப்பழத்தையும்
பட்டுப் புடவையொன்றையும்
லாவகமாய் படைத்த நொடியில்
தேவர்கள் அசுரர்களாக மாறிவிட்டார்கள்.
Thursday, November 07, 2013
விலகல்
எதிர்பாராத வேளையில்
பரணிலிருந்து விழுந்தது
அந்த பச்சை தோல் பை
தேடிய காலத்தில் எல்லாம் கிடைக்கவில்லை.
கோபம் கண்ணடைத்த ஒரு நாளில்
தரை தெறிக்க வீசியது
கடைசியாய் நினைவிலிருக்கிறது.
அதற்கு முன் என் கையோடு கையாய்
அத்தனை பூரிப்பாய்
அடங்கா கர்வியாய்
கூடவே தான் இருந்தது.
என் இயலாமைகளையும்
அச்சங்களையும்
அடர் மழை நாளொன்றின் தீராத வெறுமையையும்
பார்த்திருக்கும் அதனிடம்
எப்படி சொல்வது
பூரண வாழ்வு பெரு மகிழ் நாட்களென்று..
பூஞ்சை படர்ந்து கனத்திருக்கும் அதை
உற்றுப் பார்த்தபடியே நின்றிருந்தேன்
சரி இருக்கட்டுமென
தானாக நடந்துச் சென்று
அலமாரியின் கீழ் தட்டில்
படுத்துக்கொண்டது.
-அனிதா
Monday, March 04, 2013
அதுவே கடைசி
கிளைகள் பரப்பிய பெருமரமாகத்தான்
அறிந்திருந்தேன்
அத்தனை வளமாய்
பேராதிக்கமாய்
சலனமற்ற பார்வையோடு
கடந்துவிடமுடியாதபடியாய்.
இப்பொழுதும்
அங்கேயேதான் இருக்கிறது மரம்
எனினும் கடைசி பறவை
தன் கூட்டை சுமந்தபடி பறந்துச்சென்று
நாளாகிறது.
அத்தனை வளமாய்
பேராதிக்கமாய்
சலனமற்ற பார்வையோடு
கடந்துவிடமுடியாதபடியாய்.
இப்பொழுதும்
அங்கேயேதான் இருக்கிறது மரம்
எனினும் கடைசி பறவை
தன் கூட்டை சுமந்தபடி பறந்துச்சென்று
நாளாகிறது.
நீ
பருக தணியாத தாகம்
இறைக்கத் தீராத நீர்
கண்கள் கொள்ளாத ஆழ்கடல்
அள்ளி குறையாத கைமணல்
நினைத்து சலிக்காத காதல்
தீராத்தேடல்
உன் பிரியம்
இறைக்கத் தீராத நீர்
கண்கள் கொள்ளாத ஆழ்கடல்
அள்ளி குறையாத கைமணல்
நினைத்து சலிக்காத காதல்
தீராத்தேடல்
உன் பிரியம்
வாசம்
நான் தூங்கிட்டேம்மா
இருளில் கன்னம் தடவுகிறாள் மகள்
உறங்கும் குழந்தைக்கு வாசமிருக்கிறது
இறைந்து விழுந்தோடும் அருவியின் வாசம்
குளிர் காய எரியும் மென் தீயின் வாசம்
தூறல் புகைத்த செம்மண் வாசம்
போலவே தீர்க்கமானது
உறங்கும் குழந்தையின் வாசம்
அம்மாவுக்கு தெரியும் நீ தூங்கவில்லை என்றதும்
சிரித்தபடியே உறங்கிப்போகிறாள்
கணங்கள் நகர்த்தாமல் விழித்துக்கிடக்கும் என்னை
தலை தடவி உறங்கச்செய்கிறது கடவுள்.
நான் அறியுமுன்னே
அறையெங்கும் பரவியிருக்கிறது அனிச்சைவாசம்.
இருளில் கன்னம் தடவுகிறாள் மகள்
உறங்கும் குழந்தைக்கு வாசமிருக்கிறது
இறைந்து விழுந்தோடும் அருவியின் வாசம்
குளிர் காய எரியும் மென் தீயின் வாசம்
தூறல் புகைத்த செம்மண் வாசம்
போலவே தீர்க்கமானது
உறங்கும் குழந்தையின் வாசம்
அம்மாவுக்கு தெரியும் நீ தூங்கவில்லை என்றதும்
சிரித்தபடியே உறங்கிப்போகிறாள்
கணங்கள் நகர்த்தாமல் விழித்துக்கிடக்கும் என்னை
தலை தடவி உறங்கச்செய்கிறது கடவுள்.
நான் அறியுமுன்னே
அறையெங்கும் பரவியிருக்கிறது அனிச்சைவாசம்.
Friday, October 05, 2012
அம்மாவும் நானும் - கொடுத்துச்சென்றதும் பறித்துக்கொண்டதும்..
சில ஆண்டுகளுக்கு முன் இதே நாள் தான் அம்மா என்னை பிரிந்துச்சென்றாள்.
வாழ்வை எப்படி ஜெயிப்பது என்பதை விடவும் வாழ்வை ரசித்து ரசித்து எப்படி வாழ்வதென்று கற்றுக்கொடுத்தாள்.
அழகி. பெரிய கண்கள், அதற்கு மேல் பெரிய கண்ணாடி, நிமிர்ந்த நடை என பாலசந்தர் கதாநாயகி போல இருப்பாள்.
பாடத்தை கஷ்டப்பட்டு படிக்காதே.. உச்சி வெயிலில் நெடுந்தூரம் நடந்து வந்தபின் ஒரு மண் பானையின் குளிர் நீரை எத்தனை ஆசையோடு மிடறு மிடறாய் அருந்துவாயோ.. அத்தனை ஆசையாய் படி என்பாள்.
”ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிற” தாம்டி.. எத்தனை அழகான வரிகள் பாரேன் என்பாள்.. வார்த்தைகளை தேடித்தேடி ரசித்தாள். ரசிக்க கற்றுக் கொடுத்தாள்.
சினிமா போக மாட்டாள். டீவி பார்க்க மாட்டாள். பாடல்கள் மட்டும் கேட்பாள். எப்போதும் ஏதாவது படித்துக்கொண்டிருப்பாள்.. என் கணக்கு புத்தகத்தை வைத்துக்கொண்டு இது என்னடி ஈகுவேஷன்.. புரியல என்பாள்..
திண்டிவனம் பக்கத்தில் கோவிந்தாபுரத்தில் பிறந்து, பள்ளியிலேயே முதல் மாணவியாய் தேர்ச்சிப்பெற்று ஸ்டெல்லா மேரீஸிலும் குயீன் மேரீஸிலும் பட்டம் படித்து Railway Protection Force ல் Superintendentஆக பணியாற்றினாள்.
கல்யாணம் ஆனப்புறம் புருஷன்கிட்ட ரொம்ப அன்பா இருக்கணும். சண்டையெல்லாம் போடக்கூடாது. நிதானமா இருக்கணும் என்பாள்.. அப்படி நிதானிக்க எத்தனை மனமுதிர்ச்சியும் பக்குவமும் தேவைப்படுகிறது என்று இப்போது தெரிகிறது..
உன் கணவன் உன்னை கைக்குள் வைத்துத் தாங்கினாலும், நீ பெரிய கோடீஸ்வரியாக ஆகிவிட்டாலும் வேலைய விட்டுடாதே என்பாள். அப்போது எனக்கு இருபத்துமூன்று வயது. அம்மா இறக்கபோகும் தருவாயில் அப்பாவிடம் சிலர் “அவங்க இப்பவே VR வாங்கிட்டாங்கன்னா உங்களுக்கு பத்து லட்சத்துகிட்ட கிடைக்கும். இல்லன்னா ஒண்ணோ ரெண்டோ தான் என்றார்கள்” வேலை அவளோட பெரிய சந்தோஷம். அவ கடைசி வரைக்கும் வேலைல இருக்கணும் என்றுவிட்டார்.
எக்கசக்க தைரியசாலி அம்மா.. ஒரு முறை ரயில் பயணத்தின்போது மேல் பர்த்திலிருந்து சீண்டிய ஒருவனை காலரை கொத்தாக இழுத்து தரையில் போட்டாள். பிறகுதான் அப்பாவுக்கே சொன்னாள். அடுத்த நிறுத்ததில் ரயில்வே போலீஸ் வந்து அவனை இறக்கிச்சென்றபின் சலனமே இல்லாமல் தூங்கப்போனாள்.
தங்கத்தின்மேல் துளி கூட ஆர்வமில்லை அம்மாவுக்கு. அவளோடு இருந்த இருபத்துமூன்று வருடங்களில் மூன்றோ நான்கோ முறை தான் நகை வாங்கி பார்த்தேன். செடி வளர்த்து முதல் துளிர் விடுகையில் அந்த வெளிர் பச்சையை அழைத்துக் காட்டுவாள்.. ரோஜா செடி வளர்த்து அந்த பூவை பறித்து வைத்துக்கொண்டு அலுவலகம் ஓடுவாள்..
நிறைய கவிதைகள் எழுதினாள். நிறைய பரிசுகள் வாங்கினாள். அவளை பிடிக்காதவர்கள் யாராவது இருந்திருப்பார்களா தெரியவில்லை.
அம்மா இறந்த தினம் ஹால் கொள்ளவில்லை. அறைகள் கொள்ளவில்லை. தெருவே கொள்ளவில்லை. ஆயிரத்திற்கும் மேல் மக்கள்.. கடைசி வரை கலையவில்லை. என் வயசுக்கு இத்தனை ஜனம் பாக்கலடி நான் என்றாள் ஈபீ மாமி. இந்த நிமிடம் வரை பிரேமா பொண்ணு நீ.. அந்த நினைப்போட அவளை மாதிரியே இருக்கணும் நீ என்று நெஞ்சு கனக்க தொண்டை கமர யார் யாரோ சொல்கிறார்கள். இத்தனை ஸ்நேகம் எப்படி வளர்த்தாள்.. எல்லோருக்கும் பிடித்தமாய் எப்படி இருந்தாள்.. நான் மரித்தால் இத்தனை பேர் வருவார்களா என்றெல்லாம் நிறைய நேரம் யோசித்திருக்கிறேன்..
அவளைப்போலவே அவள் மரணம் நிறைய கற்றுக்கொடுத்தது.. நிறைய துக்கம். பின் நிறைய தெளிவு..
அம்மா கூடவேதான் இருக்கிறாள். என்ன.. அவள் விதவிதமாய் காட்டன் புடவை கட்டும்போது காலடி புடவை நுனியில் மடிப்பு படியவைத்து அழுத்தி சரிசெய்யும் பாக்கியத்தை தான் பறித்துக்கொண்டுவிட்டாள்..
Saturday, July 28, 2012
இன்று பெங்களூருவில் மழை..
லேசான தூறலாகத்தான் துவங்கியது.. எட்டி பிடிக்கிற தூரம் தானே என்று கிளம்பிவிட்டேன். தூறலில் வண்டி ஓட்டுவது எத்தனை பெரிய விடுபடல்.. நம்மிலிருந்தே.. நானிலிருந்தே.. இந்த பாழாய் போன வெள்ளை சட்டை போலிஸுக்காக ஹெல்மெட் போடவேண்டியாயிற்று.. இருந்தாலும் பெங்களூருவில் தூறலில் வண்டி ஓட்டுவது அடிக்கடி நிகழ்வது.. தவிர்க்க நினைப்பவர்கள் கூட முடியாது.. ஏதாவது இளையராஜா பாடலோ பழைய ஹிந்தி கம்போஸிங்கோ நாக்கின் நுனியில் தன்னனனாவாகவோ ம்ம்ம்வாகவோ வந்து அமர்ந்துகொண்டுவிட்டால் அந்த தூறல் பொழுது இன்னும் கோலாகலமாகிவிடுகிறது.. இன்று மதியமே இத்தனை மந்தமான மேகங்கள் கவிந்திருந்தன.. ஒரு பரபரப்பான நகரத்தின் எந்த நேரத்திலும் பெரும் மழையில் வசமிழந்து நனைவது முடிவதே இல்லை. ஏதோவொரு அச்சம் இருக்கவே செய்கிறது.. என்ன நினைப்பார்களோ என்று.. நினைப்பவர்கள் யார்? எதுவரை கூடவருவார்கள் என்று இன்னும் கொஞ்சம் யோசித்தால் சிரிப்பு வந்துவிடுகிறது. இருந்தும் தயக்கம் முழுக்க அகலுவதில்லை. ஒரு பெருமழைநாளின் இருண்ட பொழுதில் அம்மாவோடு தண்ணீர் சொட்டச் சொட்ட அரை கி.மீ நடந்ததும், கெண்டைக்கால் மூழ்கிவிட்ட நீரில் இன்னும் இன்னும் நடந்துக்கொண்டேயிருக்க நினைத்ததும் என் பதினைந்து வயதில். எத்தனை துடைத்துக்கொண்டாலும் அந்த ஈரம் காயவில்லை. பிறகொரு நாள் க்ரிஸ்டின் காலேஜிலிருந்து தொப்பலாய் நனைந்தபடி மழை சுவடே இல்லாத வீட்டு வாசலில் வந்து நின்றபோது அதெப்படி அங்க பெய்யும் இங்க பெய்யலை என்ற கேள்விக்கு புன்னகைக்க மட்டும்தான் முடிந்தது.. தெருமுனை வரை வந்து பத்திரமாய் விட்டுச்சென்ற கல்லூரி காதலன் மழை.
இன்று அப்படி ஒரு நாள். தூறல் செல்லச் செல்ல வலுக்கத்துவங்கியது. வண்டியை ஓரம்கட்டுவது சராசரி மனிதன் செய்வது. ஆனால் எல்லா நேரமும் சராசரியாய் இருக்க முடிவதில்லை. சமயத்தில் பித்து பிடித்துக்கொள்கிறது. தலையில் புத்தகத்தை வைத்துக்கொண்டு ஒடுபவன் முட்டாளாய் தெரிகிறான். கடைகளின் வாசல்களில் நிற்பவர்களெல்லாம் ப்ளாஸ்டிக் மனிதர்கள். நம்மை லூஸு போல பார்ப்பவர்களெல்லாம் வாழத்தெரியாதவர்கள். மழை மயக்கம். தூறலின்போதிருந்த பாடல்களும் உதட்டிலிருந்து வழிந்தோடிவிட மழை வலுக்க வலுக்க அங்கே பாடல் இல்லை, வண்டி இல்லை, நானுமே இல்லை. மழை முழுவதுமாய் ஆள்கிறது. ஒரு பெரிய வேகத்தடையை மிக அருகில் வந்ததுமே பார்த்து ப்ரேக் பிடிக்க பின்னாடி டயர் இங்குமங்குமாய் அல்லாடி நிலைக்கு வருகிறது. பிறகு மீண்டும் வேறு லோகம். வெளிநாட்டிற்கு சென்றுவிட்டு வருகிறவர்கள் அங்கெல்லாம் எப்படி இருக்கு இங்கெல்லாம் எப்படியிருக்கு என்று ஒப்பிட்டுக்கொண்டேயிருப்பார்கள்
. மழை நகரத்தில் பெய்யவில்லை.மூளைக்குள். ராஜாங்கம் செய்கிறது. வெளியே இருப்பவனுக்கெல்லாம் என்ன தெரிகிறது.. அது வேறு மழை உலகம்.அந்த சிக்னலில் வந்து நின்ற நேரம் 40 செகண்ட் காட்டியது. மனம் பூமிக்கு வந்துவிட்டது. ஆடைகளை ஈரம் பிரித்து சரி செய்துக்கொண்டேன். அருகில் என்னை போலவே ஹெல்மெட் போட்ட பெண் ஸ்கூட்டியில் இருந்தாள். என் முன்னே பைக் ஆண்கள். பின்னால் அமர்ந்திருந்தவன் மழையில் நனைய தயங்கியவன்போல கர்சீப் எடுத்து தலையில் போட நினைத்தான். இந்த மழைய கர்சீப் தடுக்குமா.. அவன் நனைய விரும்பினான். விரும்புவதை மறைத்துக்கொள்ள பிரயத்தினப்பட்டான். சட்டென லேசாகி மீண்டும் பின் சீட்டில் அமர்ந்துக்கொண்டான். குதூகலித்தான். அந்த பெண் என்னை பார்த்து சிரித்தாள். நானும் சிரித்தேன். அங்கே நனைந்துக்கொண்டிருந்தவர்களெல்லோரும் சிரித்தோம். பிடித்தமானது பிடித்த மக்கள் எல்லோரும் நண்பர்கள். பித்துப்பிடித்தவர்கள். நாற்பது நொடிகளில் நினைவிலிருந்து மறையாத ஸ்நேகம்.
யுத்தக்களம் போல ஓவென்று இறைஞ்சியபடி சீறிக்கொண்டு பறந்த வாகனங்களில் எல்லாம் மழை. அந்த நீண்ட தார் ரோடு மீளவே முடியாத உணர்வுகளை தன் மேல் போர்த்திக்கொண்டே என்னோடு வந்தது. மழைக்காதலர்கள் பாக்கியவான்கள். இன்று பெங்களூருவில் மழை..
Saturday, January 14, 2012
அவன் டைரியிலில்லாத குறிப்புகள்

அவன் நடந்துக்கொண்டிருந்தான்
ஒருத்தி எதிர்ப்பட்டாள்
அழகியென நினைத்தபடியே
நடை தொடர்ந்தான்
அவன் கூரை வெறித்தபடி அமர்ந்திருந்தான்
ஒருத்தி உறைமோர் கேட்க வந்தாள்
அழகியென நினைத்தான்
நினைத்துக்கொண்டே இருந்தான்
அவன் வேலைக்குச் சென்றான்
ஒருத்தியும் வேலைக்கு வந்தாள்
அழகியென நினைத்தான்
நினைத்துக்கொண்டே இருந்தான்
அவளிடம் சொன்னான்
அவன் கவிதை எழுதினான்
ஒருத்தியும் எழுதினாள்
அழகியென நினைத்தான்
நினைத்துக்கொண்டே இருந்தான்
அவளிடம் சொன்னான்
அவள் ம்ம் என்றாள்
அவன் துக்கத்தின் பெருவெளியிலிருந்தான்
ஒருத்தி கைப்பற்றித் தேற்றினாள்
அழகியென நினைத்தான்
நினைத்துக்கொண்டே இருந்தான்
அவளிடம் சொன்னான்
அவள் ம்ம் என்றாள்
அவனும் ம்ம் என்றான்
போகிற போக்கில் பொழுது கழிந்தது
ஒருத்தி வேறொருத்தி மற்றொருத்தி மற்றுமொருத்தி
உருவாகிக்கொண்டேயிருந்தார்கள்
வெளிச்சமும் இருளும் இடம் மாறிக்கொண்டேயிருந்தன
ஒரு கோப்பை தேநீருக்குப்பின்னும்
மூளை தெளியாத மாலையொன்றில்
வழக்கம்போலவே ஒருத்தி எதிர்ப்பட்டாள்
அவன் சூழலின் கவனங்களேதுமற்று
நடந்துக்கொண்டேயிருந்தான்
-அனிதா
Wednesday, January 11, 2012
என்றைக்குமில்லாமல்.
Monday, January 09, 2012
வேறாயினும்.

ஆகாத வேளை தான் இது
நடந்தவை எதுவுமே நடக்கவேயில்லையென
நம்பிக்கொள்கிறோம்.
நாம் மனிதர்கள் கூட இல்லை.
கேரட் தோட்டத்தில் விளையாடும் முயல்கள்
அல்லது பெருங்கடலோரத்து சிறு ஆமைகள்
நீந்தி ஊர்ந்து மணல் தின்று
மரணித்துவிடுவதன் பயங்களற்று
இலக்குகளின்றி அலைகிறோம்
தெளிந்த நீரில் விரல் அமிழ்த்தி
சுருங்கும்வரை காத்திருக்கிறோம்
கால் இடறும் எல்லைகளை
வசதிக்கேற்றபடி தள்ளிவைக்கிறோம்
எல்லா நேரங்களிலும்
நடந்தவை எதுவுமே நடக்கவேயில்லையென
நம்பிக்கொள்கிறோம்.
இருந்தும் நிகழ்பொழுதில்
சொல்லிவைத்தாற்போல அப்பிக்கொள்கிறது
கண்கள் பழகிக்கொள்ளவே முடியாத பேரிருட்டு.
-அனிதா
Tuesday, January 03, 2012
பெயர்
அனன்யா அம்மா
என்றழைத்த பெண்ணிடம் திரும்பி
ஏதோ சொல்ல வாயெடுத்து
நிறுத்திக்கொண்டேன்.
இதைவிட அழகாய் வேறெப்படி
அழைத்துவிட முடியும்.
என்றழைத்த பெண்ணிடம் திரும்பி
ஏதோ சொல்ல வாயெடுத்து
நிறுத்திக்கொண்டேன்.
இதைவிட அழகாய் வேறெப்படி
அழைத்துவிட முடியும்.
Wednesday, December 28, 2011
ஒரே கவலை
Monday, December 26, 2011
வெந்நீர் ஊற்றுகள்

சந்திக்க விருப்பமற்ற ஒருவர்
தான் சந்திக்க தேவையற்ற ஒருவரை
பழைய மரப்பாலமொன்றின் நடுவே
தவிர்க்கவியலாமல் பார்க்கும்படியாயிற்று
நலமா நலம்
நலமா நலம்
தேவையற்ற விசாரிப்புகள்
தெரிந்த பதில்கள்
தத்தம்
புகழை
வெற்றிகளை
கம்பீரத்தை
காதல்களை
அவசரமாய் பிரஸ்தாபிக்கிறார்கள்
வார்த்தைகள் ஒன்றோடொன்று மோதி
யாருக்கும் எட்டும்முன்னே
பாலத்தின்மேல் தெறித்து உடைகின்றன
வெந்நீர் ஊற்றொன்று
தடையமற்றுத் தூர்ந்ததுபோன்ற வெறுமை சூழ
வந்த வழியே சோர்ந்துத் திரும்பிச்செல்கிறார்கள்
வீட்டின் சுவர்களுக்குள்ளும்
தடித்த போர்வைக்குள்ளும்
வியர்த்தபடி கழிகிறது நீண்ட இரவு
அருவருப்பு தாங்காத மரப்பாலம்
உடைந்து
தண்ணீரில் உருண்டோடுகிறது.
-அனிதா
Thursday, December 22, 2011
சொல்லப்படாத பெயர்
பார்த்ததுமே பெயர் என்ன
என்கிறார்கள் குழந்தையிடம்
சொல்லிச் சொல்லி சலித்துவிட்ட குழந்தை
பெயர் சொல்வதை நிறுத்திக்கொண்டது
கேட்கும்போதெல்லாம் சொல்லப்படாத பெயர்
அறையெங்கும் பட்டு தெறித்துக்கொண்டேயிருக்கிறது
என்கிறார்கள் குழந்தையிடம்
சொல்லிச் சொல்லி சலித்துவிட்ட குழந்தை
பெயர் சொல்வதை நிறுத்திக்கொண்டது
கேட்கும்போதெல்லாம் சொல்லப்படாத பெயர்
அறையெங்கும் பட்டு தெறித்துக்கொண்டேயிருக்கிறது
கற்கள்
ஒவ்வொன்றாய் விழ விழ
கலங்குகிறது
வண்டலும் பாசையும்
கிளர்ந்தெழுகிறது
காலம் நகர
ஓரிடத்து வண்டல்
வேரிடத்தில் படிகிறது
கற்கள் விழ கலங்கும்
கலங்கி பின் தெளியும்
-அனிதா
கலங்குகிறது
வண்டலும் பாசையும்
கிளர்ந்தெழுகிறது
காலம் நகர
ஓரிடத்து வண்டல்
வேரிடத்தில் படிகிறது
கற்கள் விழ கலங்கும்
கலங்கி பின் தெளியும்
-அனிதா
விடிவு
ரத்தம் கசிந்து கசிந்து
வடிந்துவிட்ட சாயும்காலத்தில்
உள்ளாடைகள் களைந்து
படுத்திருப்பவள்போல
மல்லாக்க கிடக்கின்றன பெரும்மலைகள்
வடிந்துவிட்ட சாயும்காலத்தில்
உள்ளாடைகள் களைந்து
படுத்திருப்பவள்போல
மல்லாக்க கிடக்கின்றன பெரும்மலைகள்
Monday, January 24, 2011
சுடச் சுட மழை
வெப்பம் தாளாமல்
பிரிந்து நடக்கையில் தான்
பொழியத்துவங்குகிறது பெருமழை
அருகிலிருக்கும் கூரை தேடி ஓடி
ஈரமாகாததாய் நம்பிக்கொள்வது
ஆசுவாசமாயிருக்கிறது
ஏனெனில்
நீர் சொக்கும் ஆடைகளில்
இருக்கவே செய்கின்றன
அழுக்குப்படிந்த கற்பனைகளுக்கான
சாத்தியகூறுகள்
இன்னும் முடிவடையாத நாளின் ஓரத்தில்
இறுகிக்கிடக்கும் மண் முடிச்சுக்கள்
எதிர்பாராமல் இளகுகின்றன
கலங்கி இருப்பினும்
குளிர்ந்து வழிந்தோடுகிறது
ரோட்டோரத்து செம்மண் நீர்
போதிலும்
நகரமெங்கும் பரவி பெய்யும் மழையில்
நனைவதற்கும் ஒதுங்கி நிற்பதற்குமான
அலைகழிதலில்
ஒவ்வொருமுறையும் கழிந்துவிடுகிறது
நிகழ்
- அனிதா
பிரிந்து நடக்கையில் தான்
பொழியத்துவங்குகிறது பெருமழை
அருகிலிருக்கும் கூரை தேடி ஓடி
ஈரமாகாததாய் நம்பிக்கொள்வது
ஆசுவாசமாயிருக்கிறது
ஏனெனில்
நீர் சொக்கும் ஆடைகளில்
இருக்கவே செய்கின்றன
அழுக்குப்படிந்த கற்பனைகளுக்கான
சாத்தியகூறுகள்
இன்னும் முடிவடையாத நாளின் ஓரத்தில்
இறுகிக்கிடக்கும் மண் முடிச்சுக்கள்
எதிர்பாராமல் இளகுகின்றன
கலங்கி இருப்பினும்
குளிர்ந்து வழிந்தோடுகிறது
ரோட்டோரத்து செம்மண் நீர்
போதிலும்
நகரமெங்கும் பரவி பெய்யும் மழையில்
நனைவதற்கும் ஒதுங்கி நிற்பதற்குமான
அலைகழிதலில்
ஒவ்வொருமுறையும் கழிந்துவிடுகிறது
நிகழ்
- அனிதா
கப்பற் தொழிற்சாலை
கப்பல் செய்து தரச் சொல்லி
காகிதத்தை நீட்டுகிறாள் குழந்தை
முக்கோணமாய் மடித்து
நீள் காகிதத்தை சதுரமாய் கிழித்த பிறகு
கப்பல் செய்வது சட்டென மறந்துவிட்டது
எல்லா கோணங்களிலும்
மூளைக்குள் காகிதங்களை விடாமல் மடித்துப் பார்க்கிறேன்
காத்திருந்தால் தானாய் வெளிப்பட
கவிதை போலல்ல
கப்பல் செய்வது
வெகுநேரமாய்
கசங்கிய காகிதத்தை பார்த்தபடியே
கப்பலுக்காய் காத்திருக்கும் மகளுக்கு
நான் படித்த கப்பல் கதைகளெல்லாம்
ஒவ்வொன்றாய் சொல்லத்துவங்கினேன்
காகிதம் மெல்ல கப்பலாக உருமாறிக்கொண்டிருந்தது
-அனிதா
காகிதத்தை நீட்டுகிறாள் குழந்தை
முக்கோணமாய் மடித்து
நீள் காகிதத்தை சதுரமாய் கிழித்த பிறகு
கப்பல் செய்வது சட்டென மறந்துவிட்டது
எல்லா கோணங்களிலும்
மூளைக்குள் காகிதங்களை விடாமல் மடித்துப் பார்க்கிறேன்
காத்திருந்தால் தானாய் வெளிப்பட
கவிதை போலல்ல
கப்பல் செய்வது
வெகுநேரமாய்
கசங்கிய காகிதத்தை பார்த்தபடியே
கப்பலுக்காய் காத்திருக்கும் மகளுக்கு
நான் படித்த கப்பல் கதைகளெல்லாம்
ஒவ்வொன்றாய் சொல்லத்துவங்கினேன்
காகிதம் மெல்ல கப்பலாக உருமாறிக்கொண்டிருந்தது
-அனிதா

இந்த வலைப்பூவை துவங்கையில் இத்தனை நீண்ட இடைவேளை விழும் என நினைக்கவில்லை.
படித்துக்கொண்டிருப்பது மட்டுமே பிரதானமாய் இருந்தது அப்போது.
அலுவலகம் செல்கையில், தேநீர் பருகுகையில், விடுதியின் தனிமையில், பேருந்து பயணங்களில் என எப்பொழுதும் இடத்திற்கேற்றவாறு புத்தகங்கள் தேடிப் படித்துக்கொண்டிருந்தேன்.
தினம் தினம் கவிதை எழுதுவதெல்லாம் எனக்கு என்றுமே கைவந்ததில்லை. மெல்ல உணர்வாய் உருவாகி வார்த்தைகள் சேர்ந்து மனதை அழுத்திக்கொண்டிருந்து பின் தானாய் வெளிப்படும் வரை காத்திருப்பேன்.
அந்த நிலை உலகளாவிய செய்கைகளிலிருந்து அப்பார்பட்டதாகவே இருந்திருக்கிறது.
கவிதை தோன்றி எழுதும் வரை வேறு பிரதேசத்தில் உலவிவிட்டு, கவிதை முடிந்ததும் தரையிறங்குவது போன்ற மனநிலை. எதிர்பார்ப்புகளற்றுக் கழிந்துக்கொண்டிருந்த காலம் திருமணமானதும் மாறத்துவங்கியது. பிடித்தது பிடிக்காதது, எதை ஒப்புக்கொள்வது எதில் நிலைபாடுகள் மாறாமல் நிற்பதென தினம் புதிய கோணமாய் யோசனைகள் இத்தனை காலமாய் என்னை பற்றிய என்னுடைய புரிதல்களை கேள்வியெழுப்பத்துவங்கின..
விளிம்பிலிருந்து சற்று உள்ளே வந்து இருவர் இருக்கும் உலகிற்குள் இழைந்துக்கொள்வது எப்படியென புரிந்தபிறகு இருத்தல் அழகாகத்துவங்கியது. பிறகு அனன்யா பிறந்தாள். அதுவரை கூட என் கவிதைகள் என் இருத்தலை நோக்கித் திரும்பவில்லை. குழந்தை வந்த பிறகு அவளின் உலகம் புதியதாய் இருந்தது. அதனை அருகிருந்து பார்ப்பது இந்நிமிடம் வரை மாறாத ஆச்சர்யங்களை தந்துக்கொண்டு தான் இருக்கிறது. அது கவிதைக்குள்ளும் புகுந்துக்கொண்டது.
இப்பொழுது மீண்டும் ஒரு குழந்தை. இம்முறை அழகான ஆண் குழந்தை. இந்த பத்து மாதங்களும் நான் வலைப்பூ பக்கம் வரவில்லை.. ஏனெனில் இந்த குழந்தையும் அவளைப்போலவே எந்த சங்கடங்களும் இன்றி ஆரோக்கியமாய் இருக்கவும், குழந்தையுடன் முழு பொழுதையும் கழித்து நினைவுகள் சேகரிப்பதிலும் உறுதியாயிருந்தேன்.
இன்று கணவர், ஒரு பெண் ஒரு ஆண் குழந்தை என வாழ்க்கை முழுமைபெற்றிருக்கிறது.
என்னுடன் என் வலைப்பூவும் நல்ல நண்பர்களும் பயணித்துக்கொண்டிருப்பது பெரும் பலமாயிருக்கிறது.
நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
- அனிதா
Subscribe to:
Posts (Atom)



