
ஏனென்றால்
ஊறப்போட்ட அரைமணியில்
துவைத்து உலர்த்திவிட்டேன்
திரண்டு வரும் மேகம் எந்நேரமும்
கொட்டத்துவங்கும்
அல்லது சட்டென கலைந்தும் போகலாம்
சதை துளைக்கும் வெயில் இறங்கி
ஈரம் உறிந்து வெளுக்கடிக்கலாம்
எத்தனை அழைத்தும் கீழிறனங்காமல்
மொட்டைமாடியிலேயே அமர்ந்திருக்கிறேன்
காரணங்கள் கோர்த்தே சகலமும் செய்யும் என்
தோழிகளுக்கு மட்டும் சொல்கிறேன்
வாகனப் புகையில் திணறித் தப்பித்த காற்று
வறுத்த கடலை வாசம் சுமந்து
என் துணிகளை முதலில் உலர்த்த
இப்போது வரும்
என் மக்கள்
விளம்பரப் பலகைகளை
வாய் பிளந்து வெறித்தபடி நகர்கிறது
இந்த மழைப்பயணம்
கூரைத் தொட்டு துருக்கம்பிகளில் வழிந்து
தொடைநனைக்கும்
ஜன்னலோர ஈரம் உதடு சுழிக்கச்செய்கிறது
மிகமெல்லிய இசையாலும் குறைக்க
முடியவில்லை
அகண்ட தோள் சாய்ந்து மழை ரசிக்கும்
முன்னிருப்பவள் மீதான துவேஷத்தை
பயணச்சீட்டை மோதிர இடுக்கில் சொருகி
இருந்தவளின்
பட்டைச்சரிகைக்கு பொருந்தாத
நிறக்கலவைப்பற்றி
சொல்லலாமென்றிருந்தபோது
மணற்சூடு அடங்காத குறுகியத்
தெருமுனையில்
நலுங்காமல் இறக்கிவிட்டு
மற்றங்களின்றி பயணிக்கிறார்கள்
இத்தனை நேரமும் தனிமை தீண்டாது
என்னை தாங்கிப் பிடித்திருந்த
என் மக்கள்
நன்றி : புதிய காற்று