Monday, August 20, 2007

காந்தி மை பாதர் - விமர்சனம்

சமீபத்தில் நான் பார்த்த இரண்டு திரைப்படங்கள் - சிவாஜி, காந்தி மை பாதர் (Gandhi my Father). சிவாஜி பற்றி ஏற்கனவே பலரும் தேவையான அளவு அலசி ஆராய்ந்து பிழிந்துலர்த்திவிட்டதால், "காந்தி மை பாதர்" பற்றி சில...

கதை தெரிந்தால் படம் பார்க்க நன்றாக இருக்காது என்பது பொருந்தாத, நானும் பார்த்துவிட்டேன் என்று சொல்ல வேண்டிய Period films வரிசையில் மற்றொன்று.

முதல் தயாரிப்பாய் இருப்பினும், Blockbuster, Superduper hit என்றெல்லாம் பேசப்படாது என்று தெரிந்தும், மசாலாக்களில் இறங்காமல் நம் பிரகாஷ்ராஜ் போல நல்ல படம் குடுக்க நினைத்த அனில் கபூரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

காந்திக்கும் அவர் மகன் ஹரிலாலுக்குமான உறவே படம். தான் படித்த பேரிஸ்டர் படிப்பு, தன் மகனுக்கு தேவை இல்லை என்றும், அடிப்படை கல்வியைவிட உரிமைகளுக்காய் போராடி சிறை செல்வது வாழ்வை கற்றுத் தரும் என்றும் நினைக்கும் காந்தியின் எண்ணங்களும், அதன்படியே மகனை "சுதந்திரமாய்" தன் போராட்டப் பாதையில் நடக்கச் செய்ய முயற்சிப்பதும் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்றாகி விடுகிறது. படிப்படியாய் சீர்குலையும் ஒருவரின் வாழ்க்கை கண்முன்னே விரியும்போது வேதனையே மிஞ்சுகிறது.

காந்தி மீது மிகுந்த மரியாதையும், பயமும் கொண்ட ஹரிலால், இந்தியா திரும்புவதற்குமுன் தன் தந்தையிடம் மிகத் தெளிவாய் நியாயம் கேட்பதும், அவர் பேச்சற்று நிற்பதுமான உரையாடலில் இனி ஹரி விரும்பிய பேரிஸ்டர் படிக்கவோ, அவன் விரும்பிய நியாயமான வாழ்வை கூட வாழ முடியாது என்றும் புரியும் இடம் முக்கியத் திருப்புமுனை.

காந்தியின் வேகம், உற்சாகம், தன்னம்பிக்கை எல்லாம் அப்படியே கொண்ட மகன், சிறிது சிறிதாய் தோய்ந்து போகிறான். படிப்பும் இல்லை, தொழில் தொடங்க வசதி இல்லை, அப்பாவின் பணத்தில் வாழ்கிறோமென்ற கழிவிரக்கம், நான்கு குழந்தைகளையும் மனைவியையும் கவனித்துக்கொள்ள முடியாத இயலாமை எனத் துயரத்தில் இருக்கும் ஒருவன். இவன் வாழ்வைத் திருத்த பல சந்தர்ப்பங்கள் இருந்தும், காந்தி அவற்றைத் தவறவிடுவதும், புறக்கணிப்பதும், அவனாக சுயமாய் வேலை செய்யும்போது இவர் சென்று தன்னுடன் வந்துவிடும்படி வேண்டி மீண்டும் அவன் காயப்பட்டு குறுகிப் போவதும் நடந்தபடி இருக்கிறது. கடைசி வரை தனக்கென்று எவருமே இல்லாமல், சொல்லிக்கொள்ளும்படி எதுவுமே செய்ய முடியாமல் தெருவில் கிடந்து இறந்து போவானென்றும் (கதையே தெரியாமல் படம் பார்க்க சென்றாலும்) சுலபமாய் ஊகிக்க முடிகிறது.

ஆப்பிரிக்கா, குஜராத், கல்கத்தா என காட்சிகள் தெளிவாய் உணர்த்துவதால் இட குழப்பங்கள் இல்லை. காந்தியின் வெவ்வேறு போராட்டங்களும், படிப்படியாய் புரட்சிகள் செய்வதும், அச்சமயங்களில் ஹரிலாலின் நிலையும் ஒப்பீடாய் காட்டப்படுகிறது.

மெல்லிய இசையும், கண் உறுத்தாத காட்சியமைப்பும், கருப்பு வெள்ளை காட்சிகளை படமாக்கிய விதமும் அழகு.
வசன உச்சரிப்பு, காந்தியின் அச்சாய் தோற்றம்(காது உட்பட) வயோதிக ஒப்பனை எல்லாம் தர்ஷன் ஜரிவாலா (Darshan Jariwala) வுக்கு பொருந்தி வந்திருக்கிறது. ஹரிலாலாய் வரும் அக்ஷை கண்ணா (Akshay Khanna) உற்சாகமும் கனவுகளும் கண்ணில் தேக்கி அலையும்போதும் சரி, சிதைந்தபின் அன்பிற்கு ஏங்கி அம்மாவைத் தேடி வரும்போதும் சரி, காட்சிக்கு காட்சி மிளிர்கிறார்.
காந்தியின் மனைவி கஸ்தூர் (ஷெபாலி ஷெட்டி) க்கு வயோதிக ஒப்பனை அடை அடையாய் கண்ணை உறுத்துகிறது. மகன் தவறான பாதையில் செல்வதை வெறுமே பார்த்து வேதனைப்படுவதும், காந்தி செல்லும் இடமெல்லாம் கூட செல்வதும் மட்டுமே அவர் வேலை என்பதுபோல் காட்டி இருக்கிறார்கள். ஹரிலாலின் மனைவியாய் வரும் பூமிகா, நல்ல மனைவி, நல்ல மருமகள், நல்ல தாய் பட்டங்கள் வாங்கிக்கொண்டு இறந்து போகிறார்.

காந்தி செய்த பிழையால்தான் மகன் கஷ்டப்படுகிறான் என்பது தெளிவாய் தெரிகிறது. காந்தி மேல் ஏற்படும் கோபத்தை படிப்படியாய் திசை திருப்ப முயற்சித்திருக்கிறார்கள். சரி படிக்க வைக்கவில்லை, அதற்குபிறகு எல்லா உதவியும் செய்தாரே.. அப்பொழுதும் ஏன் அவன் திருந்தவில்லை என்பதுபோல் காந்தி இமேஜ் பாதிக்காமல் இருக்க கவனமாய் இருப்பதால் சின்ன செயற்கைத்தனம் வந்துவிடுகிறது.

வரலாற்றில் கவனிக்கபடாமல் அமிழ்ந்துபோன சிறிய பகுதியை தெரிந்துக்கொள்ளும் எண்ணத்தோடோ, சுதந்திரம் வந்த கணத்தை உணர்ந்து ரசிக்கவோ, என்னதான் நடந்துது அந்த ஆளுக்கு என்ற வெறும் ஆர்வத்துக்காகவோ, எப்படியானாலும் முன் முடிவுகளின்றி ஒரு முறை பார்த்துவிட்டு வரலாம்.

-அனிதா

Thursday, August 16, 2007

என் பிரிய வழிபோக்கனுக்கு

இன்னும் நேரமிருக்கிறது
காதலோ காமமோ கவிதையோ
எது தோன்றினாலும் பேசு.

கனவுகள் நெய்வதும்,உயிர் உருக காத்திருப்பதும்
இதயம் பரிமாறுவதும்
இன்ன பிற வசனங்களையும்
பொறுமையாய் கேட்டுக்கொள்கிறேன்.

நெடு நாள் சலிக்காமலிருக்கும்படியாய்
கவனமாய் நினைவுகள் சேகரித்துவை
பிரிவுகள் பற்றிபேசாது இருள் கவியும் வரை
என் விரல்பின்னி தோள்சாய்ந்துக்கொண்டிரு.

என் ரயில் வரும் வேளை
தடயங்கள் துடைத்தெடுத்துக்கொண்டு
நகர்ந்துவிடு.

Tuesday, August 07, 2007

அந்தர் முகம் - நாவல்

என்டமூரி வீரேந்திரநாத் எழுதி தெலுங்கிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட இந்த நாவல் சமீபத்தில் வாசிக்கக் கிடைத்தது. அதிர்ச்சிகளுடன் துவங்கி அதிர்ச்சிகளுடனே நீண்டு, அதிர்ச்சியாய் முடிகிறது நாவல்.

எத்தனை விதமான மாயைகள் சூழ வாழ்கிறோமென புரியும்போது உண்மை முகத்தில் அறைகிறது. கதையின் நாயகனைப் போல பலரும் நம்மைச் சுற்றி வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் மீதான நமது அபிப்பிராயங்கள் சொல்லிக்கொள்ளும்படியாய் இல்லை. அல்லது அவர்களைப்பற்றிய அபிப்பிராயங்களை உருவாக்கிக்கொள்ள நாம் மெனக்கெடுவது கூட இல்லை. வேஷங்களிட முற்படாத மனிதர்களை வேஷமணிந்தவர்கள் புறக்கணிப்பதும் அலட்சியமாய் கையாள்வதும் தினமும் நம்மிடையே நடப்பதுதானென உணர்த்துகிறது.

கதையெங்கும் ஒரு மெல்லிய எள்ளல் இருப்பது பெரும் பலம். எத்தனையோ நிகழ்வுகளை கடந்தபோதும் ,சமூகம் குறித்தான நாயகனின் கண்ணோட்டம் மாறாமலிருப்பதும், மாற்றிக்கொள்ள தேவை இல்லையென நமக்கு படுவதும் அந்த கதாபாத்திரத்தின் மதிப்பை கூட்டி விடுகிறது.

கதை நெடுக மெல்லிய நீரோடை போல பெண்கள் தொடர்ந்து வருகிறார்கள். பெண்களை கையெடுத்துக்கும்பிடுங்கள் என போதிக்காமல், பெண்களே சமூகத்தில் நிகழும் தவறுகளுக்கெல்லாம் காரணம் என்றும் பழிச்சொல்லிகொண்டிருக்காமல், சற்று கூட குறைய இருந்திருந்தாலும் அர்த்தங்கள் மாறி விடும் அபாயம் இருக்கும் இது போன்ற கதைகளில் மிக கவனமாக கையண்டிருக்கிறார் வீரேந்திரநாத்.

திரைப்படம் பார்ப்பதுபோல் ஆங்காங்கே தோன்றினாலும் மனிதர்களின் பொய் முகங்களை கிழித்தெறியும் இது போன்ற நாவல்களில் அவைகளை பொருட்படுத்தாமல் விட்டுவிடலாம்.

சமூகம் என்ற ஒன்றை உடைத்தெறியும் எண்ணங்கள் இல்லாமல், அதற்குள் இருக்கும் மனிதமன அழுக்குகளை மட்டுமே வெளிக்கொண்டுவர மேற்கொண்ட சிறந்த முயற்சி இது.இந்த நாயகன் நிச்சயம் உங்களருகில் இருக்கும் ஒருவரை நினைவுபடுத்துவான் அல்லது அவன் நீங்களாகவே கூட இருக்கலாம்.இப்படி தான் இருக்கிறோம் எனத்துணிச்சலுடன் ஏற்றுக்கொள்ள முடிந்தால் இந்த கதை ஒரு நல்ல அனுபவம்.

-அனிதா

Friday, August 03, 2007

டாஓ டே சிங்க் - சீன நூல்


ஏறக்குறைய இரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சீன மொழியில் உருவாக்கபட்ட டாஓ டே சிங்க் (Tao Te Ching), சீன புத்தகங்களிலேயே மிக அதிகமாக மொழி பெயர்க்கப்பட்ட நூல் எனலாம். எல்லா நிகழ்வுகளின் அடிப்படையிலும் விவாதங்களே வேண்டியிராத உண்மை ஒன்றிருப்பதை வலியுறுத்தும் இந்தப் புத்தகம் எல்லா சீன சித்தாந்தங்களுக்கும் அடிப்படையாக கருதப்படுகிறது.

டாஓ டே சிங்க் எனத் தட்டச்சினால், எண்பத்தியோரு அதிகாரங்களே கொண்ட இந்த நூலின் பல வடிவங்கள் வந்து குவிந்துவிடும். அரை மணியில் படித்துவிடலாம் என்றாலும் மலரை பற்றிய விவரணை மலரை குறிக்கவில்லை என்றும், மண் பற்றிய வாக்கியங்கள் மண்ணைச் சொல்லவில்லை என்றும் உணரும் நேரம் புத்தகம் நம்மை உள்ளிழுத்துக்கொள்கிறது.


வள்ளுவரை யாரேனும் பார்த்திருக்கிறார்களா, அவர் தாடி வைத்திருந்தாரா இல்லையா என்றெல்லாம் கேள்விகள் மிச்சமிருப்பதுப்போல டாஓ டே சிங்க்கை எழுதிய லாவோ ட்ச்சு (Lao Tzu - வயதான வாலிபன் என்று பொருள்) பற்றியும் சரியான தகவல்கள் இல்லை. இருந்தும் சுவாரஸ்யமாய், அவர் மிக வயோதிகமான நிலையில், எருமை மேல் பயணித்து மலைகளுக்குள் வசிக்க விரும்பி புறப்பட்ட நேரம், ஒரு எல்லை காவலாளி அவரை நிறுத்தி அவர் கற்றவையும் போதித்தவையும் எழுதி தருமாறு வேண்டிக்கொள்ள, அவர் அங்கேயே எழுதிக்கொடுத்துவிட்டு பயணத்தை தொடர்ந்ததாயும் பின் அவரை யாருமே பார்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆழ்ந்து படிக்க வேண்டாம். தட்டையான முதல் வாசிப்பிலேயே மனது மிக லேசாகி விடுகிறது.கவிதை போன்ற சின்ன சின்ன உவமைகளுடனும், மிக எளிய கற்பனை செய்துக்கொள்ளமுடிந்த விவரணைகளுமாக தொடரும் எழுத்துக்களில் ஒரு தேர்ந்த போதகரின் அனுபவங்களை வழிபோக்கனின் அலட்சியத்தோடு சொல்லியிருப்பதுத் தெரிகிறது.


புத்தகத்திலிருந்து சில‌ :-


அதிகாரம் 3

திறமைகளை பெரியதாய் எண்ணாமலிருந்தால் பொறாமைகள் வருவதில்லை. பொருட்களை மதிப்பிடாமலிருந்தால் திருடும் எண்ணம் வருவதில்லை. இன்னவை தான் பிடித்தவை என முடிவுகளெடுக்காமலிருப்பின் குழப்பங்கள் வருவதில்லை.

தேவையற்ற எண்ணங்களால் இதயத்தை நிறைப்பதற்குபதில் நல்ல உணவு உண்டு வயிறு நிறைக்கலாம். நோயில்லாமல் காத்துக்கொள்ள முற்படலாம். ஆசைகளற்ற சாதாரண மனிதனிடம் சாமர்த்தியக்காரர்களின் வேலைகள் எடுபடுவதில்லை. எதிர்ப்பார்ப்புகளின்றி காரியங்களைத் தொடர்ந்தபடி இரு. தொல்லையே இல்லை!!


அதிகாரம் 45

சிறந்த சாதனைகள் முழுமையற்றவையாக தெரிகின்றன, இருந்தும் அதன் உபயோகங்களை அலட்சியப்படுத்திவிட முடிவதில்லை. பூரணமாய் இருப்பது ஒன்றுமில்லாததாய் தெரிகிறது, இருந்தும் அதை வற்ற வைக்க முடிவதில்லை.

மிக நேராக இருப்பது கோணலாக‌ தெரிவதும், சிறந்த அறிவு குழப்புவதாய் தெரிவதும், சிறந்த பேச்சு திக்குவதாய் தோன்றுவதும் இவ்வாறாகவே இருக்கிறது. அசைவது குளிரை குறைக்கிறது. அசைவற்றிருப்பது சூடு தணிக்கிறது.

அமைதியாய் இருப்பது எல்லா சஞ்சலங்களையும் நேர்படுத்திவிடுகிறது.

மேலும் படிக்க‌ :-
http://en.wikipedia.org/wiki/Tao_Te_Ching

http://www.religiousworlds.com/taoism/ttcstan3.html
http://www.sacred-texts.com/tao/taote.htm