Wednesday, May 05, 2010

பெண்களும் பூக்களும்..




ஒரு வலைப்பூவை துவங்குவதென்பது ஒரு குழந்தை பிறப்பதை ஒத்ததாக எண்ணத்தோன்றுகிறது. வலைப்பூவுக்கு பெயரிடுகையில் எழுதப்போகிறவர் மனநிலை சார்ந்தே பெயர்கள் யோசிக்கிறார்கள். எழுதப்படும் கருத்துக்களும் ஆரம்பத்தில் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாத என் எண்ணம் இது என்பதாய் இருக்கிறது. இந்த வலைப்பூவை துவங்கினால் நாளை நான் பரவலாக அறியப்படுவேன் என்கிற எண்ணம் எதுவும் ஆரம்பத்தில் இருப்பதில்லை. பிறகு எழுதுவது பிடித்து போக சிலர் பாராட்டத்துவங்கிய பிறகு, மெல்ல தனக்கே உண்டான எழுத்து பிறர் பார்வைக்கு மாறத்துவங்குகிறது. மாற்றங்கள் நிறத்திலும், லேஅவுட்டிலும் இருப்பதை தாண்டி புத்திக்குள்ளும் புகுந்துக்கொள்கிறது. நானும் ரவுடி தான் என்று எதை பற்றி வேண்டுமானாலும் தெரியுமோ தெரியாதோ யார் வேண்டுமானாலும் பதிக்க முடிகிறது. முக்கியமாக, எல்லாம் தெரியும் என்கிற தொனி சற்று மிரளவே செய்கிறது. அங்கீகாரத்திற்காய் சதா சர்வமும் அலையும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். தானே பின்னூட்டம் இட்டுக்கொள்வது, பிறர் வலைப்பூவில் பின்னூட்டமிட்டால் அவர் நமக்கு பின்னூட்டமிடுவார் என்று கணக்கு போடுதுவதெல்லாம் அங்கீகாரத்தின் நீட்சிகளே..

இப்படியிருக்க, எந்த குழப்பங்களும் யோசனைகளும் இல்லாத அந்த வலைப்பூ துவங்கிய நாளும் ஆரம்பத்து எழுத்துக்களும் எவ்வளவு நேரடியானவை.. மனதுக்கு இதமானவை.. எனக்கு ஏதாவது ஒரு வலைப்பூ வாசிக்க கிடைக்கையில் பழைய எழுத்துக்களையே முதலில் வாசிக்கிறேன். எழுத்தில் தேர்ச்சி வருவதற்கும் எழுத்தின் நோக்கம் மாறிப்போவதற்குமான வித்தியாசத்தை கண்கூடாக உணர முடிகிறது.

இப்படி யோசித்ததின் அடிப்படையில் நான் வெகு நாட்களாய் படிக்கும் சில வலைப்பூக்கள் சட்டென்று நினைவுக்கு வந்தன.

cakerwakers.blogspot.com எழுதும் கிரிஸ்டி யை நான் தனிபட்ட முறையில் அறிந்ததில்லை. Serendipity யாக தான் இந்த வலைப்பூ கண்ணில் பட்டது. இலக்கியம் இல்லை. எதை பற்றியும் பெரிய கருத்துக்கள் இல்லை. ஆங்கில புலமையின் வெளிபாடு இல்லை. பின்னூட்ட கவலைகள் இல்லை. எல்லாவற்றுக்கும் மேல் இதை நான் எழுதுவதால் எனக்கு அவமானமோ பாராட்டோ வந்துவிடுமோ என்ற குழப்பம் இல்லை. எனக்கு தெரிந்ததை நான் எழுதுகிறேன். அவ்வளவே இந்த வலைப்பூ. ஏதோ ஒரு நெருக்கத்தை இந்த வலைப்பூ தருகிறது. கஷ்டங்களை எழுதும்போதும் ரௌத்திரம் வெளிப்படுத்தும்போதும்கூட மெல்லிய நகைச்சுவையுடனே எழுதுகிறாள். (உ.ம் - I Childproofed the house but they still got in!!) அலுவலகம், இலக்கியம், ஆளுமைகள், நிழல்வெளி நீர்வெளி எல்லாவற்றையும் இளக்கிவிட்டு படித்தால் பிடிக்கலாம்.

tinklingsmiles.blogspot.com வலைப்பூவை படிக்கும்போதெல்லாம் ஒரு மென்மையை உணர்கிறேன். தான் மனதில் நினைத்ததை தெளிவாக கம்பீரமாக கோர்வையாக ஸ்மைலியால் சொல்ல முடிகிறது. சமூகத்தை பற்றிய தன் பார்வையை முன்வைப்பதிலும் தயக்கங்கள் இல்லை. இவள் தான் பெண் என்பதில் பெருமைக் கொள்ளும் அதே வேளையில் வலைப்பூவின் எந்த இதழும் பெண்ணியம் பேசவில்லை. சில வேளைகளில் வேதாந்தி போலவும் சில நேரம் வம்பளக்கும் எதிர் வீட்டு பெண் போலவுமான எழுத்து ஆர்வமேற்படுத்துகிறது. என் நீண்ட நாள் தோழி என்பதாலும் எத்தனையோ விஷயங்களை பேசி விவாதித்து பரிமாறிக்கொண்டதாலும் என்னால் இவளின் வலைப்பூவில் இருக்கும் மனம் திறந்த பாசாங்கற்ற எழுத்தை உணரவும் ரசிக்கவும் முடிகிறது.

yalisai.blogspot.com சமீபத்தில் லேகாவின் வலைப்பூவை காண நேர்ந்தது. முதலில் என்னை ஈர்த்தது அந்த வலைப்பூவின் ஒழுக்கம். மிக நேர்த்தியாக வகைப்படுத்தப்பட்டு தெளிவான வெளிபாடு. எழுத்துக்களில் எங்கும் அலட்டல் இல்லை. பதட்டம் இல்லை. நான் படித்தேன், நான் பார்த்தேன் என் கருத்து இது என்பதான பகிர்தல் மட்டுமே இருந்தது. முழுதாய் ஆற அமர படிக்க இலக்கியமாய் ஒரு வலைப்பூ.. லேகாவிற்கு இந்த முதல் விருது கிடைத்திருப்பதில் மாற்றுகருத்து இருக்க வாய்ப்பில்லை. வாழ்த்துக்கள் லேகா!

எந்த தேடல்களும் இன்றி எழுதியிருப்பதை அப்படியே உள்வாங்கி ரசிக்கவும் ஒரு மனநிலைத்தேவைப்படுகிறது. இந்த வலைப்பூக்களை படிக்கையில் lightness வந்துவிடுகிறது. மனம் திறந்து கர்வங்கள் களைந்து ரசிக்கலாம்.

-அனிதா