Thursday, June 21, 2007

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

என் பிறந்தநாளுக்கு நண்பர்களின் கவிதைகள் :

இதோ உன் பிறந்தநாள்
பூக்கள் எல்லாம் இன்றுதான் பிறந்தன
வண்ணங்கலோடு பட்டாம்பூச்சிகளும்
தேவதை பற்றிய கதைகளும் வானவில்லும்
இன்றுதான் பிறந்தன
உனக்கு பரிசாக அந்த வண்டுகளின் தேனையும்
பூக்களின் நறுமணத்தையும் தருகிறேன்
வாழ்க நீயும் உன் கவிதையும் நூறாண்டுகள்!

- தியாகு ((c) seewtypie2000@gmail.com)

ஏ சூரியனே..
அனிதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை
சொல்லி விட்டாயா?
மழை மேகத்தால்
உன் அழகு முகம் மறைத்து சொல்லாமல்
ஒடி விடலாம் என்று மட்டும் நினைக்காதே.
நாளையும் இதே வழியாகத்தான் போயாக வேண்டும் நீ. (!!!)

- வீணாப்போனவன் ((c) veenaapponavan@yahoo.com )

:)

நண்பர்களுக்கு நன்றி!!!

Wednesday, June 13, 2007

எதற்காகவோ கண் கலங்கியபடி
ஆட்டோவில் ஏறினேன்

மௌனமாய் விம்மத்துவங்கி
பின் உடைந்து பெரிதாய் அழவும்
ஆட்டோக்காரன் திரும்பிப்பார்த்து
ஏன் அழறீங்க என்றான்
பின் என்ன நினைத்தானோ அழாதீங்க‌ என்றான்
என் இடம் வந்ததும்
கொடுத்த இருபது ரூபாய்க்கு எட்டு ரூபாய் சில்லரை
எண்ணி கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.

அந்த மீதி சில்லரையாவது வாங்காமல் விட்டிருக்கலாம்.

Monday, June 04, 2007

தெறித்துச் சிதறும் வார்த்தைகள்

இடைவிடாது உன்னிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்

இறைந்து கிடக்கும் சொற்கள் சேர்த்து
நேர்க்கோட்டில் அடுக்குகிறேன்
உன்னை சுவாரஸ்யபடுத்த புதிது புதிதாய் செதுக்கியெடுக்குறேன்
நயமிகு வார்த்தைகளை

கண்ணீரோ சிரிப்போ சலிப்போ பூசி மேலும் அலங்கரிக்கிறேன்.
ஊறவைத்து அலம்பி மிதமாய் சூடெற்றி
மிக கவனமாய் உன் விழி பார்த்தபடி
மெல்ல உதிர்க்கிறேன் ஒவ்வொரு வரியாய்

கவிதை நன்றாக வந்திருக்கிறதென்கிறாய்
துவக்கமும் முடிவுமற்ற ஒற்றை வரியில்.

சிறு உரசலுக்கு உடைந்துவிடுகிற பெரும் மௌனம்
என்னுள் வளரத்துவங்குகிறது
அதிவேகமாய்.