Tuesday, February 13, 2007

ஒற்றை ரோஜா...

விடுதி அறையை சுத்தம் செய்கையில்
இரும்பு பீரோ இடுக்கிலிருந்து
பூந்துடைப்பத்தில் ஒட்டிக்கொண்டு வந்தது
நீள் காம்புமாய் ஒடியும் இலைகளுமாய்
கறுத்துவிட்டிருந்த ஒற்றை ரோஜா.

எனக்குமுன் இருந்தவரோ
அதற்குமுன் இருந்தவரோ
யாருடைய‌தாக‌வும் இருக்க‌லாம்.

ம‌ற‌ந்த‌தா ம‌றுத்த‌தா எனத் தெரியாத‌ ப‌ட்ச‌த்தில்
ம‌ட‌ல்வில‌க்கி தூசு அக‌ற்றி சுவ‌ரில் ஒட்டிவிட்டேன்.

கொடுத்த‌வ‌ரும் பெற்ற‌வ‌ரும்
இன்னும் பிரியாம‌ல் இருக்க‌வும் கூடும்.

- அனிதா

நன்றி : ஆனந்த விகடன்
என் ஒழுங்கின்மையின் நுணுக்கங்களை
சோதித்துக் கொண்டிருந்தப் புத்தகத்தை
மூடிய வேகத்தில் சிதறித்தெறித்தன‌
சில முளைக்கட்டிய விதைகள்.
தலையணைக்குள் முகம் புதைத்து
காயத்துவங்கியிருந்த விதைகளை
நெருடிக்கொண்டிருந்தேன்.
ஜ‌ன்ன‌லின் வெளியே
அன‌ல்காற்றின் சுழ‌ற்சியில்
இடைவ‌ளைத்து சுழ‌ன்றுக்கொண்டிருந்த‌து
சூல்தாங்கி ஓங்கி வ‌ள‌ர்ந்த‌
ச‌ற்று முன் இருந்திராத‌
அந்த‌ ம‌ர‌ம்.

Wednesday, February 07, 2007

காமம் குழைத்துப் பூசிய‌
என் மூளைச்சுருக்கங்களிலிருந்து
ஒவ்வொன்றாய் உதிரத்துவங்குகின்றன‌
மலரின் ஸ்பரிசமும்
தனிமையின் நிச்சலனமும்
மரணத்தின் இயல்பும்.
சில கூரிய வாஞ்சைகளின்
முடுச்சுக்கள் இளகியதும்
பக்கு பக்காய் உதிர்ந்துவிட்டிருந்தது
என் காமமும்.