Wednesday, November 11, 2009

நான் மட்டும்

திருமாங்கல்யதாரணம் முடியும்வரை
அணையாமல் பாதுகாக்கவேண்டுமென எச்சரித்தபடி
காமாட்சி விளக்கை
கையில் கொடுத்தார்கள்

திரி நுனி வெளிச்சத்தையே
கூர்ந்தபடியிருக்கிறேன்
எல்லா புகைப்படங்களிலும்.

Monday, October 12, 2009

ஒரு மாறுதலுக்காய்..

குழந்தையின் இசைக்கருவியில்
விதம்விதமாய் மிருகங்கள்
பொத்தான்களை அழுத்துகையில்
அதனதன் குரலில் பாடும்

நிறங்களும் சப்தங்களும்
அவள் சின்ன விரல்களை
சலிக்காமல் ஈர்க்கும்

அவள் உறங்கியதும்
பொத்தான் களை ஒவ்வொன்றாய் கழற்றி
மாற்றி மாற்றி பொருத்தினேன்.

மாடு கனைப்பதையும் வாத்து குரைப்பதையும்
பார்க்க பயமாயிருக்கிறது.

சற்றுமுன் நடந்த விபத்து..

நிகழ்ந்த நொடியில்
வாகனங்கள் தேங்கத்துவங்கிவிட்டன

அடிபட்டவனை சுற்றி
ஆனவரை கூட்டம் சேர்ந்தது

அதிர்வலைகள் பரவி
என்னை வந்து சேர்ந்தபோது
இறந்துவிட்டான் என்றார்கள்

ஆம்புலன்ஸில் ஏற்றும்போது
பரிச்சயமில்லாத ஆடைகளை குறித்துக்கொண்டபின்
கண்ணாடி சில்லுகள் மேல் ஏற்றிய
என் வாகனத்தின் டயர் பழுதாகியிருக்குமோவென

கவலைப்படத் துவங்கினேன்.

அடையாளம்

வெளியூரில் இருக்கும் தாத்தாவை
மறந்துவிடாமல் இருக்க
தினம் புகைப்படம் காட்டி
பழக்குகிறாள் அம்மா

ஊருக்கு வந்தபோது
புகைப்படம் நடமாடுவதை கண்டு
மிரண்டதிர்ந்து அழுகிறது குழந்தை.

Monday, September 14, 2009

பின்னோக்கி இழுக்கும் ரயில்

ரயிலில் ஏறியதுமே குதூகலிக்கிறாள் குழந்தை

தொண்டைக்குள் நீர் தேக்கி
கர்ர்ர் என்று சப்தமிடுகிறாள்
நொடி நேரமும் கையில் அடங்காமல்
இங்கும் அங்கும் தாவ முயல்கிறாள்
இல்லாத யாரையோ கண்ணாடி ஜன்னல் வழியே
சலிக்காமல் அழைக்கிறாள்
கடந்து செல்பவர்கள் புன்னகைத்துப் போகிறார்கள்
சிலர் எட்டி கன்னம் கிள்ளுகிறார்கள்
சிரித்துவிட்டு பதில் சிரிப்புக்காய் காத்திருக்கிறார்கள்

அடக்கவியலா பெருமிதத்தோடு
ரயிலின் தாளம் பழகியவளாய்
குழந்தைக்கு ஆடை மாற்றி பால் புகட்டி
அவளுக்குள்ளேயே மூழ்கியிருக்கிறேன்

இவ்வளவு சலனங்களுக்கும் சற்றும் நிமிறாமல்
புத்தகம் படிக்கிறாள்
எதிர் இருக்கையில் இருப்பவள்

என் கவன ஈர்ப்பு செய்கைகளெல்லாம்
குழந்தையை தாண்டி அவளுக்காய்
மாறத்துவங்கிய நிமிடத்திலிருந்து
புத்தகங்களுக்குள் ஊறிக்கொண்டிருந்த நாட்களில் ரசித்த
குழந்தைகளின் முகங்களை நினைவுகூற முயன்றுக்கொண்டிருக்கிறேன்

இந்த நிமிடம் வரை.

Older Posts

Blogger Template by Blogcrowds