Monday, October 12, 2009

ஒரு மாறுதலுக்காய்..

குழந்தையின் இசைக்கருவியில்
விதம்விதமாய் மிருகங்கள்
பொத்தான்களை அழுத்துகையில்
அதனதன் குரலில் பாடும்

நிறங்களும் சப்தங்களும்
அவள் சின்ன விரல்களை
சலிக்காமல் ஈர்க்கும்

அவள் உறங்கியதும்
பொத்தான் களை ஒவ்வொன்றாய் கழற்றி
மாற்றி மாற்றி பொருத்தினேன்.

மாடு கனைப்பதையும் வாத்து குரைப்பதையும்
பார்க்க பயமாயிருக்கிறது.

சற்றுமுன் நடந்த விபத்து..

நிகழ்ந்த நொடியில்
வாகனங்கள் தேங்கத்துவங்கிவிட்டன

அடிபட்டவனை சுற்றி
ஆனவரை கூட்டம் சேர்ந்தது

அதிர்வலைகள் பரவி
என்னை வந்து சேர்ந்தபோது
இறந்துவிட்டான் என்றார்கள்

ஆம்புலன்ஸில் ஏற்றும்போது
பரிச்சயமில்லாத ஆடைகளை குறித்துக்கொண்டபின்
கண்ணாடி சில்லுகள் மேல் ஏற்றிய
என் வாகனத்தின் டயர் பழுதாகியிருக்குமோவென

கவலைப்படத் துவங்கினேன்.

அடையாளம்

வெளியூரில் இருக்கும் தாத்தாவை
மறந்துவிடாமல் இருக்க
தினம் புகைப்படம் காட்டி
பழக்குகிறாள் அம்மா

ஊருக்கு வந்தபோது
புகைப்படம் நடமாடுவதை கண்டு
மிரண்டதிர்ந்து அழுகிறது குழந்தை.