Thursday, November 07, 2013

விலகல்

எதிர்பாராத வேளையில்
பரணிலிருந்து விழுந்தது
அந்த பச்சை தோல் பை

தேடிய காலத்தில் எல்லாம் கிடைக்கவில்லை.

கோபம் கண்ணடைத்த ஒரு நாளில்
தரை தெறிக்க வீசியது
கடைசியாய் நினைவிலிருக்கிறது.

அதற்கு முன் என் கையோடு கையாய்
அத்தனை பூரிப்பாய்
அடங்கா கர்வியாய்
கூடவே தான் இருந்தது.

என் இயலாமைகளையும்
அச்சங்களையும்
அடர் மழை நாளொன்றின் தீராத வெறுமையையும்
பார்த்திருக்கும் அதனிடம்
எப்படி சொல்வது
பூரண வாழ்வு பெரு மகிழ் நாட்களென்று..

பூஞ்சை படர்ந்து கனத்திருக்கும் அதை
உற்றுப் பார்த்தபடியே நின்றிருந்தேன்
சரி இருக்கட்டுமென
தானாக நடந்துச் சென்று
அலமாரியின் கீழ் தட்டில்
படுத்துக்கொண்டது.

-அனிதா