Friday, January 08, 2010

பசித்த நகரத்தில் இருப்பவர்கள்




ஆண்களுக்கெல்லாம் மிகப் பிடித்த
பெண்ணும்
பெண்களுக்கெல்லாம் மிகப் பிடித்த
ஆணும்
அருகருகே அமர்ந்திருந்தார்கள்

ஆண் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தான்
பெண் கூந்தலை சரி செய்தபடியிருந்தாள்

ஆண் தன் தோரணை
கம்பீரமாயிருப்பதாய் காட்டிக்கொண்டான்
பெண் தன் அழகு
ஈர்க்கும்படியாய் பார்த்துக்கொண்டாள்

ஆண் தொலைகாட்சியில்
கிரிக்கெட் பார்க்கத்துவங்கினான்
பெண் கடமைக்கென சமைத்தாள்

உன்னுடனான காமம் சலித்துவிட்டது
என்றான் ஆண்
உன் முகம் பார்க்கவே அருவருப்பாயிருக்கிறது
என்றாள் பெண்

மார்கழி பின்னிரவொன்றில்
நெஞ்சடைத்து இறந்து போனாள் பெண்
ஆண் பைத்தியமாகி அலையத்துவங்கினான்

பாழடையத்துவங்கிய வீட்டின்
அலமாரியில் இருக்கின்றன

ஆண்களுக்கெல்லாம் மிகப் பிடித்த
பெண்ணின் பொம்மையும்
பெண்களுக்கெல்லாம் மிகப் பிடித்த
ஆணின் பொம்மையும்

முத்தமிட்டபடி.

-அனிதா

சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் உரையாடல் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது

Friday, January 01, 2010

2010 - மகிழ்ச்சியும் குதூகலமும் நிறைய..

2009 ஆண்டு வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை. இத்தனை வேகமாக, மகிழ்வாக ஒரு ஆண்டு இதற்கு முன் கழிந்ததாக நினைவில்லை. எட்டு மாத சூல் தாங்கி 2009 க்குள் நுழைகையில் நிறைய சின்ன சின்ன எதிர்பார்ப்புகள் மட்டுமே இருந்தன.. குழந்தை பிறக்கும்போது முதல் கவிதை தொகுப்பு கையில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்திருந்தேன்.. எங்கள் முதல் திருமண நாள் (24.2) அன்று குழந்தை பிறக்கவேண்டுமே என்றும் சின்ன (பெரிய்ய்ய) ஆசை.. முதலாவது நடந்தது. இரெண்டாவது சற்றே ஓவரான ஆசை என்பதால் கொஞ்சம் தள்ளி மார்ச் முதல் நாள் அனன்யா பிறந்தாள்.

கால‌ம் கால‌மாய் வீல் என்று அல‌றிய‌ உட‌னே குழ‌ந்தை பிற‌ப்ப‌தாய் பார்த்து ப‌ழகிவிட்டு இந்த ப‌ன்னிரெண்டு ம‌ணி நேர‌ வ‌லி பெரும் ஆப‌த்து வ‌ந்து விட்ட‌தை போல‌ ப‌த‌ற்ற‌முற‌ச் செய்த‌து. விடிய‌ற்காலை நால‌ரை ம‌ணிக்கு வ‌லி முற்றிலும் நின்றுவிட்ட‌து.. பிற‌கு ஒரு அதிச‌ய‌ம் நிக‌ழ்ந்த‌து.. முற்றிலும் இற‌ங்கிவிட்டிருந்த‌ என் வ‌யிறு தானாக‌ முறுக்கி குழ‌ந்தையை வெளியே த‌ள்ள‌த்துவ‌ங்கிய‌து.. யாரோ வயிற்றை பிடித்து கீழ் நோக்கி மெல்ல நீவுவதைப்போன்ற உணர்வு.. என் முழு உட‌லும் குழ‌ந்தையை வெளியே த‌ள்ளுவ‌தில் ஈடுப‌ட‌த்துவ‌ங்கிய‌து பார்த்து விய‌ந்து போனேன். சீரான மெல்லிசை போல‌ ப‌த‌ற்ற‌மே இல்லாம‌ல் அத்த‌னை அழ‌காக வ‌லி இல்லாம‌ல் அந்த க‌டைசி அரை ம‌ணி நேர‌ம் ஆச்ச‌ர்ய‌மான‌து. அந்த நொடிகளை முழுமையாக உணர்ந்து, ரசித்து, லயித்து,இத்தனை அழகானதா இந்த குழந்தை பேறு என்று இவளை மடியில் கிடத்தியபடி எழுதும் இந்நேரம் கூட சிலிர்த்துக்கொள்கிறேன்.. குழந்தை பிறந்ததுமே திரைக்கு அந்த பக்கம் பரிசோதித்த குழந்தை டாக்டர் " The baby can be with the mother now" என்றதும் அட நான்தான் நான்தான் என்று நினைத்துக்கொண்டேன். அரை மயக்கத்தில் செம சூப்பர் டாக்டர் நீங்க, சான்ஸே இல்ல.. சூப்பரா டெலிவரி பார்த்தீங்க என் குழந்த வந்துடுச்சு என் குழந்தை வந்த நேரம் தான் கலைஞர் உடம்பு சரி ஆகி வீட்டுக்கு போறாரு பாருங்க என்று சென்னை தமிழில் வாயில் வந்த பாராட்டையெல்லாம் பொழிந்துக்கொடிருந்ததும், ரொம்ப பேசறா இவ என்று டாக்டர் பொய் கோபம் காட்டியதும் ரெண்டு நாள் கழித்து சொன்னபோது கூச்சமாக இருந்தது.. நாம நினைச்ச மாதிரியே பொண்ணு பாப்பா பொற‌ந்திருக்காடி என்று குர‌ல் க‌ம்மி தொண்டை அடைக்க‌ என் க‌ண‌வர் என் கைப்பிடித்துக்கொண்ட‌போது அந்த அறை எங்க‌ள் மூவ‌ரையும் அர‌வணைத்துக்கொண்ட‌து.

இதோ இவ‌ள் ந‌ட‌க்க‌த்துவ‌ங்கிவிட்டாள். இந்த‌ ஒரு வ‌ருட‌ம் முழுக்க இலக்கியம் அலுவலகமெல்லாம் கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு அவளுக்காக திறந்திருக்கும் உலகத்திற்காக‌ நிறைய‌ நினைவுக‌ளையும், புகைப்ப‌ட‌ங்க‌ளையும், அனுப‌வ‌ங்க‌ளையும், வீடு நிறைய சிதறிக்கிடக்கும் விளையாட்டு பொருட்க‌ளையும் ச‌ந்தோஷ‌ங்க‌ளையும் சேக‌ரித்த‌ப‌டியிருந்தேன்.

சில உறவுகள் விலகிவிட்டதும், சில உறவுகள் நெருங்கி வந்ததும், பிரியாணிக்கு கத்திரிக்காய் சேர்வை (ஆற்காடு ஸ்பெஷல்) கற்றுக்கொண்டதும் இந்த வருடத்து இன்னும் சில இணைப்புகள்.

நான் யாரென்றே கூட தெரியாவிட்டாலும் என் கவிதைகளுக்கு பின்னூட்டமிட்டும் எந்த எதிர்பார்ப்புகளுமின்றி என்னை எழுதும்படி உற்சாகமூட்டியும் உரிமையுடன் அறிவுரை வழங்கும் நல்ல நண்பர்களுடன் இந்த 2010க்குள் நுழைந்திருக்கிறேன். மிக மகிழ்வான ஆண்டாய் இவ்வ‌ருடம் அனைவருக்கும் அமைய வாழ்த்துகள்.

-அனிதா