Thursday, March 19, 2009

இரட்டிப்பு மகிழ்ச்சி!!

நண்பர்களுக்கு வணக்கம்

மார்ச் முதல் நாள் அழகிய பெண் குழந்தைக்கு தாயாகியிருக்கிறேன் என்பதை உங்களுடன் பகிர்ந்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

அதே நேரத்தில் என் முதல் கவிதைத்தொகுப்பு கனவு கலையாத கடற்கன்னி என்ற பெயரில் உயிர்மை வெளியீடாக வந்திருக்கிறது.





அதன் முன்னுரை இங்கே :



முன்னுரை

அனுமானங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் இடையே இருக்கும் மெல்லிய இடைவெளியில் கசிந்து மறையும் நிதர்சனத்தை என் கவிதைகளில் பதிவு செய்ய முயல்கிறேன். உண்மைகளை உணரத் துவங்கும்போது மிகுந்த துயரத்திற்கோ, பெருகும் மகிழ்சிக்கோ அல்லது என்னுள் பரவும் இனம்புரியா உணர்வுக்கோ ஆளாகிறேன். ஒரு கவிதை படித்து வெகுநேரம் அமிழ்ந்திருப்பதும், சில நாட்கள் தேங்கி கிடப்பதும் யாருடனும் பகிர்ந்து புரியவைக்க முடியாத அனுபவமாகிவிடுகிறது. அதுவே, நான் கவிதைகள் எழுத உந்துதலாகவும் அமைந்திருக்கிறது.

கவிதையாய்ப் பேசிப் பழகி , கவிதையாய் வாழ்ந்து என் எழுத்துக்களில் இன்னும் உயிர்த்திருக்கும் என் அம்மாவை முதல் கவிதைத் தொகுப்பு வெளிவரும் இந்த நேரம் நெகிழ்வாய் நினைத்துக்கொள்கிறேன்.

எல்லா பெண்களையும் போல என்னைச்சுற்றியும் பாதுகாப்பு வளையமிருக்கிறது. அறுத்தெறிய இயலாத வளையம். எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தின் அளவினை ஒப்பிடவோ, அளக்கவோ முயன்றதில்லை. பத்திரமாய் பயணிக்கவும், வேளைக்கு உணவு உண்ணவும், நல்ல மனிதர்களை அடையாளம் கண்டு பழகவும், எது கேட்டாலும் வாங்கி கொடுத்தும் ,என்னைக் கைக்குள் வைத்து தாங்கும் என் குடும்பத்தாருக்கு என் பிரியங்கள்.

ஆர்வமாய் என் கவிதைகளைப் படித்து விமர்சித்தும், நம்பிக்கையூட்டியும் எழுதச் செய்த பத்திரிக்கை மற்றும் இணைய உலக நண்பர்களுக்கும், தோழிகளுக்கும் நன்றி.

என் கற்பனை உலகத்து அழகுகளையும் அபத்தங்களையும் நானே பிரித்துப் பார்த்து என்னைச் செதுக்கிக் கொள்ளவும், நிதர்சனங்களின் வெப்பத்தை பதறாமல் கையாளவும் கற்றுத்தந்த கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கும் இந்தத் தொகுப்பை வெளியிடும் உயிர்மை பதிப்பகத்திற்கும் என் நன்றி.

இந்தத் தொகுப்பில் உள்ள பல கவிதைகளைப் பிரசுரித்த உயிர்மை, தீரா நதி, புதியபார்வை, உயிர் எழுத்து, பனிக்குடம், புதிய காற்று, வார்த்தை, உயிரோசை, நெய்தல், மணல் வீடு, ஆனந்தவிகடன், திண்ணை, வார்ப்பு ஆகிய இதழ்களுக்கு நன்றி.

இவ்வளவு மகிழ்வோடும், நிறைவோடும் வாழ்வதைச் சாத்தியப்படுத்திய நண்பர்களுக்கு என் பிரியங்களையும் , வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பிரியங்களுடன்
அனிதா
பெங்களூரு

மின்னஞ்சல் : anithu21@gmail.com



புத்தகம் வாங்க‌

Uyirmmai
11/29 Subramaniyan street
Abiramapuram
Chenna-600018.
Tamil nadu
India
Tele/fax: 91-44-24993448

- அனிதா


********************************************************************************