Thursday, April 03, 2008

கடலாகி



காத்திருக்கவோ கிளம்பிப் போகவோ சொல்வதற்கு
யாருமில்லாத சுவடுகளற்ற மணலில்
மாராப்பின் பிரக்ஞைகளற்று
கடல் வெறித்துக்கொண்டிருக்கிறேன்

ஒழுக்கங்களின் பட்டியல் குறுகிக்கொண்டிருப்பினும்
நிலவு படிந்திருக்கும் நீரின் வெம்மையை மீறிய
அடி ஆழத்தின் குளுமை புரியும் எனக்கு.

உன் நல விசாரிப்பைப் போலவே செயற்கையாய்
பெயரில்லாத இந்தக் கடலின் மறுகரைக்கு
ஏதேனும் பெயர் வைத்திருக்ககூடும்
வாழ்தலை சீராக்குவதில் முனைந்திருப்பவர்கள்.

பிரிதொரு நாளின் வெப்பம் தணியத் துவங்கி
நக இடுக்கின் மணல் பிரித்தெடுக்கையில்
பிரியங்களை நினைத்துக்கொண்டவளாய்
கடல் அள்ளி அகண்ட பரப்பில்
மடித்தெடுத்துக்கொண்டு புறப்பட்டேன்

இடம்பெயர்தலின் கேள்விகள் ஏதுமின்றி
புரண்டு படுக்கிறாள்
இன்னும் கனவு கலையாத கடற்கன்னி.

- அனிதா
நன்றி : புதிய பார்வை