Friday, January 08, 2010

பசித்த நகரத்தில் இருப்பவர்கள்




ஆண்களுக்கெல்லாம் மிகப் பிடித்த
பெண்ணும்
பெண்களுக்கெல்லாம் மிகப் பிடித்த
ஆணும்
அருகருகே அமர்ந்திருந்தார்கள்

ஆண் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தான்
பெண் கூந்தலை சரி செய்தபடியிருந்தாள்

ஆண் தன் தோரணை
கம்பீரமாயிருப்பதாய் காட்டிக்கொண்டான்
பெண் தன் அழகு
ஈர்க்கும்படியாய் பார்த்துக்கொண்டாள்

ஆண் தொலைகாட்சியில்
கிரிக்கெட் பார்க்கத்துவங்கினான்
பெண் கடமைக்கென சமைத்தாள்

உன்னுடனான காமம் சலித்துவிட்டது
என்றான் ஆண்
உன் முகம் பார்க்கவே அருவருப்பாயிருக்கிறது
என்றாள் பெண்

மார்கழி பின்னிரவொன்றில்
நெஞ்சடைத்து இறந்து போனாள் பெண்
ஆண் பைத்தியமாகி அலையத்துவங்கினான்

பாழடையத்துவங்கிய வீட்டின்
அலமாரியில் இருக்கின்றன

ஆண்களுக்கெல்லாம் மிகப் பிடித்த
பெண்ணின் பொம்மையும்
பெண்களுக்கெல்லாம் மிகப் பிடித்த
ஆணின் பொம்மையும்

முத்தமிட்டபடி.

-அனிதா

சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் உரையாடல் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது

38 comments:

ஜீவன்சிவம் said...

கவிதை அருமை..

வாழும் வரை புரிந்துகொள்ள சந்தர்ப்பமே கிடைப்பதில்லை என்பது உண்மையல்ல.. புரிந்துகொள்ள முயற்சிக்காமலேயே வாழ்க்கை முடிந்து போகிறது.

ஆயில்யன் said...

அருமை!

கவிதையோடு நன்கு பொருந்தும் தலைப்பும் கூட...!

அண்ணாமலையான் said...

நிஜம்தான், நிஜமேதான்...

யாத்ரா said...

மிகப் பெரிய கேள்வி, ஆண்களுக்கெல்லாம் மிகப்பிடித்த பெண்ணை அருகிலிருக்கும் ஆணுக்கு ஏன் பிடிக்காமல் போகிறது. பெண்களுக்கெல்லாம் மிகப்பிடித்த ஆணை அருகிலிருக்கும் பெண்ணுக்கு ஏன் பிடிக்காமல் போகிறது. ஆண் பெண் உறவிகளின் நுட்பமான சிடுக்குகளில் பயணிக்கிறது கவிதை. இறுதியில் பொம்மையோடு கவிதை முடிந்திருப்பதும்,,,,,,,, ரொம்ப அருமையான கவிதை. ஆதவன் எழுத்தில் இப்படி நிறைய படித்து ரசித்திருக்கிறேன். இக்கவிதை ஆதவனை ஒரு கணம் நினைவுறுத்தியது.

Anitha Jayakumar said...

நன்றி ஜீவன்சிவம்.. முடிந்து போன பிறகும் புரிவதில்லையோ..
நன்றி ஆயில்யன்..
நன்றி அண்ணாமலையான்
நன்றி யாத்ரா..
//ஆண் பெண் உறவிகளின் நுட்பமான சிடுக்குகளில்..// நிஜம் தான் இல்லையா.. அவரவர்கள் உருவாக்கிக்கொண்டிருக்கும் பிம்பங்களை கடந்து மற்றவரை அரவணைத்துக்கொள்வது எத்தனை கடினமாக இருக்கிறது..

நட்புடன் ஜமால் said...

வார்த்தைகள் கோர்த்து அழுக்கான நிஜம்.

Anitha Jayakumar said...

இது திட்டா பாராட்டா ஜமால்? :)

ny said...

class!

இராவணன் said...

//ஆண்களுக்கெல்லாம் மிகப் பிடித்த
பெண்ணின் பொம்மையும்
பெண்களுக்கெல்லாம் மிகப் பிடித்த
ஆணின் பொம்மையும்
முத்தமிட்டபடி //

ஆழம் அழகு.

இளைய அப்துல்லாஹ் said...

உண்மை மிக நல்ல கவிதை உணர்வு பூர்வமாக வந்திருக்கு

ரெஜோ said...

அழகான கவிதை .. வெற்றிபெற வாழ்த்துகள் :-)

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நல்ல கவிதை...

வெற்றி பெற வாழ்த்துகள்....

-ப்ரியமுடன்
சேரல்

நிலாரசிகன் said...

நல்லா இருக்கு அனிதா.வாழ்த்துகள்.

பத்மா said...

nalla kavithai
arumaiyana nadai.
vaazhthukkal.
all the best
padma

Unknown said...

Hi Anitha,
Recently i started follow ur blogs..its very nice..good keep it up...i like salma,thabu sankar kavithaigal too...I really appreciating that you are managing your time to keep writig passion to alive.

http://nalladhoer-veenai.blogspot.com/

butterfly Surya said...

Keep rocking..

வாழ்த்துகள் அனிதா.

"உழவன்" "Uzhavan" said...

நகரத்தார்களை நன்றாகப் படம் பிடித்துள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்!

Arun Jeevan said...

NICE POEM..

WE HAVE A LIFE...

WE HAVE NO TIME TO LIFE...

EVERTHING IS NEAR TO US....

BUT WE ARE ALWAYS SEEKING SOMETHING SOMEWHERE...

THAT'S ONLY A PROBLEM..

NICE POEM.

TAKE CARE.. ALL THE BEST...

விஜய் மகேந்திரன் said...

good poem ,valthukkal

Kartheeswaran said...

எதேச்சையாக வலைத்தளத்தில் உலாவிய போது தங்களின் கவிதைகளை வாசிக்க நேர்ந்தது...
மிகவும் அருமை... குறிப்பாக தங்கள் கவிதையின் தலைப்பு... வாழ்த்துக்கள் தோழியே...!!!

siva said...

"நமக்கு பிடித்தமானவர்களிடம் நாம் செலுத்தும் அன்பு என்பது., அவர்கள் விரும்பும் நடிப்பையே" இதற்க்கு மேல் உறவுகளுக்குள் இம்மாபெரும் பிரபஞ்சத்தில் என்ன இருக்கிறது?

அடைய முடியாததின் மீது இருக்கும் ஈர்ப்பும் அடைந்த பின் ஏற்படும் வெறுமையும் ஒன்றும் புதிதல்ல..

இருட்டில் கண்கள் பழகுவது போல தான் இல்லையா?

இக்கவிதையின் மரபு சார் வீழ்ச்சி அதிகம் இருப்பினும்..! கருத்து மெய்யற்றதே..

தங்களின் முயற்ச்சிக்கு வாழ்த்துகள்., மேலும் முன்னகர ஆழ்ந்த வாசிப்பும்.,நுண்ணுனர்வும் பெற வேண்டுகிறேன்...

Anitha Jayakumar said...

அன்புள்ள சிவா..

தங்கள் கருத்துக்கு நன்றி.
ஆனால் உங்கள் பார்வையிலிருந்து நான் வேறுபடுகிறேன்.

//"நமக்கு பிடித்தமானவர்களிடம் நாம் செலுத்தும் அன்பு என்பது., அவர்கள் விரும்பும் நடிப்பையே"//

இது complete philosophical view என்றே நினைக்கிறேன். உடல் என்றால் என்ன ரத்தமும் சதையுமான ஒன்று தானே, மண்ணில் போவதுதானெ என்பதுபோல் இருக்கிறது அந்த வரிகள். இம்மதிரியான அணுகுமுறையில் அன்பு என்றில்லை,வேறு எந்த உணர்வையுமே வெளிப்படுத்தவியலாமல் போய்விடும்.

// அடைய முடியாததின் மீது இருக்கும் ஈர்ப்பும் அடைந்த பின் ஏற்படும் வெறுமையும் ஒன்றும் புதிதல்ல..//

நான் புதியதை சொல்ல முயற்சிக்கவில்லை. புதியதாய் இனி இந்த வானுக்கு கீழ் சொல்ல வேறொன்றுமில்லை. எல்லாம் ஏற்கனவே எழுதபட்டாயிற்று. இந்த கவிதை சொல்ல வருவது இரு மனங்களுக்குள்ளான சிக்கலான உணர்வுகளை மட்டுமே. அதை தாண்டி வேறொன்றுமில்லை. வெளிப்படையான பகிர்தல்களும் புரிதல்களும் அந்த உறவை புதுபித்துக்கொண்டே இருக்கும். இல்லாவிட்டால் சோர்வே மிஞ்சும். இந்த கருத்து மெய்யற்றிருப்பதாய் எனக்கு தோன்றவில்லை.

//தங்களின் முயற்ச்சிக்கு வாழ்த்துகள்., மேலும் முன்னகர ஆழ்ந்த வாசிப்பும்.,நுண்ணுனர்வும் பெற வேண்டுகிறேன்... //

தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. இந்த கவிதையை புரிந்து படித்து "அட ஆமாம்ல" என்று ஒருவரேனும் யோசித்தால் இந்த கவிதை முழுமைபெற்றதாக நினைக்கிறேன். நுண்ணுனர்வு இல்லாத எவராலும் கவிதை என்றில்லை வேறு எந்த கலைக்குள்ளுமே நுழையமுடியாது. வெவ்வேறு காலகட்டங்களில் சில கவிதைகள் பிடித்தவையாயும் சில அவ்வளவாய் ஈர்க்காதவையாயும் ஆகிவிடுகின்றன. அது படிக்கும் வாசகனின் மனநிலை சார்ந்தது.

ஆழ்ந்த வாசிப்பா? :) நான் ஆழ்ந்து வாசிப்பதை பற்றி இங்கு பிரஸ்தாபிக்க விரும்பவில்லை. மேலும் கவிதைகளின் வடிவத்திற்கும் நடைக்கும் ஆழ்ந்த வாசிப்பு உதவலாம். வெளிப்படும் உணர்வுக்கு பா/கே/ப அனுபவங்கள் போதும் என்றே நினைக்கிறேன். ஏனென்றால் வாசிக்கும் புத்தகங்கள் எல்லாவற்றிலுமே எழுதியவரின் உணர்வு கலந்திருக்கிறது. ஆழ்ந்து வாசித்துவிட்டு தான் எழுதவேண்டுமென்றால் வேறொருவர் கருத்துக்களை தான் எழுதிக்கொண்டிருக்கவேண்டும்.

நன்றி
அனிதா

anithu21@gmail.com

கே.ஜே.அசோக்குமார் said...

உங்கள் கவிதைகள் நன்றாக இருக்கின்றன.

thiyaa said...

நல்லாருக்கு

சென்ஷி said...

நல்லாருக்குங்க..

www.eraaedwin.com said...

ஆண்களுக்கெல்லாம் பிடித்த பெண்ணும், பெண்களுக்கெல்லாம் பிடித்த ஆணும் அருகருகிலா?

பார்த்த நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.

சத்தியமாய் சொல்கிறேன் எனக்குப் பிடித்த ஒரு நூறு கவிதைகளுள் இதுவும் ஒன்று.

இடம் மட்டும் சொல்ல மாட்டேன்

இரா.எட்வின்

"உழவன்" "Uzhavan" said...

பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்!

அன்புடன்
உழவன்

manjoorraja said...

இக்கவிதை போட்டியில் வென்றிருக்கிறது.

அதற்காக வாழ்த்துகளும் பாராட்டும்.

உங்கள் பிறந்த நாளில் மகிழ்ச்சியான செய்தி.

பா.ராஜாராம் said...

வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் அனிதா! :-)

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் அனிதா!

-ப்ரியமுடன்
சேரல்

கமலேஷ் said...

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் தோழி..

அன்பேசிவம் said...

வெற்றிபெற்றமைக்கு வாழ்த்துக்கள், அனிதா அவர்களே!

கவிநா... said...

வெற்றிபெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....

prince said...

//நான் புதியதை சொல்ல முயற்சிக்கவில்லை. புதியதாய் இனி இந்த வானுக்கு கீழ் சொல்ல வேறொன்றுமில்லை. எல்லாம் ஏற்கனவே எழுதபட்டாயிற்று. இந்த கவிதை சொல்ல வருவது இரு மனங்களுக்குள்ளான சிக்கலான உணர்வுகளை மட்டுமே.///

தங்கள் கருத்துக்கு நானும் உடன் படுகிறேன்.

Anitha Jayakumar said...

வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி..

சுந்தர்ஜி said...

மிகத்தாமதாக வர நேர்கிறது.இந்தக் கவிதை நகரவாசிகளின் தினசரி வாழ்வை சலிப்பை எடுத்துச் சொல்லும் மொழி பாசாங்கற்று இருக்கிறது.தவிர வெகு சீக்கிரமே பொறுமையற்றுப் பிறரின் குறை நிறைகளைப் பெரிதாக்குவதிலும் உறவு மேலும் சீரழிகிறது.நல்ல வடிவம் அனிதா.

Anonymous said...

Hearty Congrats!

Unknown said...

கவிதையின் தொடக்கமும், இறுதியும் ஈர்ப்பு விசையில் ஒன்றைஒன்று மிஞ்சுகின்றன.. அருமையான உணர்வாக்கம்..