Friday, August 03, 2007

டாஓ டே சிங்க் - சீன நூல்


ஏறக்குறைய இரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சீன மொழியில் உருவாக்கபட்ட டாஓ டே சிங்க் (Tao Te Ching), சீன புத்தகங்களிலேயே மிக அதிகமாக மொழி பெயர்க்கப்பட்ட நூல் எனலாம். எல்லா நிகழ்வுகளின் அடிப்படையிலும் விவாதங்களே வேண்டியிராத உண்மை ஒன்றிருப்பதை வலியுறுத்தும் இந்தப் புத்தகம் எல்லா சீன சித்தாந்தங்களுக்கும் அடிப்படையாக கருதப்படுகிறது.

டாஓ டே சிங்க் எனத் தட்டச்சினால், எண்பத்தியோரு அதிகாரங்களே கொண்ட இந்த நூலின் பல வடிவங்கள் வந்து குவிந்துவிடும். அரை மணியில் படித்துவிடலாம் என்றாலும் மலரை பற்றிய விவரணை மலரை குறிக்கவில்லை என்றும், மண் பற்றிய வாக்கியங்கள் மண்ணைச் சொல்லவில்லை என்றும் உணரும் நேரம் புத்தகம் நம்மை உள்ளிழுத்துக்கொள்கிறது.


வள்ளுவரை யாரேனும் பார்த்திருக்கிறார்களா, அவர் தாடி வைத்திருந்தாரா இல்லையா என்றெல்லாம் கேள்விகள் மிச்சமிருப்பதுப்போல டாஓ டே சிங்க்கை எழுதிய லாவோ ட்ச்சு (Lao Tzu - வயதான வாலிபன் என்று பொருள்) பற்றியும் சரியான தகவல்கள் இல்லை. இருந்தும் சுவாரஸ்யமாய், அவர் மிக வயோதிகமான நிலையில், எருமை மேல் பயணித்து மலைகளுக்குள் வசிக்க விரும்பி புறப்பட்ட நேரம், ஒரு எல்லை காவலாளி அவரை நிறுத்தி அவர் கற்றவையும் போதித்தவையும் எழுதி தருமாறு வேண்டிக்கொள்ள, அவர் அங்கேயே எழுதிக்கொடுத்துவிட்டு பயணத்தை தொடர்ந்ததாயும் பின் அவரை யாருமே பார்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆழ்ந்து படிக்க வேண்டாம். தட்டையான முதல் வாசிப்பிலேயே மனது மிக லேசாகி விடுகிறது.கவிதை போன்ற சின்ன சின்ன உவமைகளுடனும், மிக எளிய கற்பனை செய்துக்கொள்ளமுடிந்த விவரணைகளுமாக தொடரும் எழுத்துக்களில் ஒரு தேர்ந்த போதகரின் அனுபவங்களை வழிபோக்கனின் அலட்சியத்தோடு சொல்லியிருப்பதுத் தெரிகிறது.


புத்தகத்திலிருந்து சில‌ :-


அதிகாரம் 3

திறமைகளை பெரியதாய் எண்ணாமலிருந்தால் பொறாமைகள் வருவதில்லை. பொருட்களை மதிப்பிடாமலிருந்தால் திருடும் எண்ணம் வருவதில்லை. இன்னவை தான் பிடித்தவை என முடிவுகளெடுக்காமலிருப்பின் குழப்பங்கள் வருவதில்லை.

தேவையற்ற எண்ணங்களால் இதயத்தை நிறைப்பதற்குபதில் நல்ல உணவு உண்டு வயிறு நிறைக்கலாம். நோயில்லாமல் காத்துக்கொள்ள முற்படலாம். ஆசைகளற்ற சாதாரண மனிதனிடம் சாமர்த்தியக்காரர்களின் வேலைகள் எடுபடுவதில்லை. எதிர்ப்பார்ப்புகளின்றி காரியங்களைத் தொடர்ந்தபடி இரு. தொல்லையே இல்லை!!


அதிகாரம் 45

சிறந்த சாதனைகள் முழுமையற்றவையாக தெரிகின்றன, இருந்தும் அதன் உபயோகங்களை அலட்சியப்படுத்திவிட முடிவதில்லை. பூரணமாய் இருப்பது ஒன்றுமில்லாததாய் தெரிகிறது, இருந்தும் அதை வற்ற வைக்க முடிவதில்லை.

மிக நேராக இருப்பது கோணலாக‌ தெரிவதும், சிறந்த அறிவு குழப்புவதாய் தெரிவதும், சிறந்த பேச்சு திக்குவதாய் தோன்றுவதும் இவ்வாறாகவே இருக்கிறது. அசைவது குளிரை குறைக்கிறது. அசைவற்றிருப்பது சூடு தணிக்கிறது.

அமைதியாய் இருப்பது எல்லா சஞ்சலங்களையும் நேர்படுத்திவிடுகிறது.

மேலும் படிக்க‌ :-
http://en.wikipedia.org/wiki/Tao_Te_Ching

http://www.religiousworlds.com/taoism/ttcstan3.html
http://www.sacred-texts.com/tao/taote.htm

1 comment:

ஹரன்பிரசன்னா said...

http://www.anyindian.com/product_info.php?products_id=77001