Friday, November 02, 2007

உறுபசி - நாவல்

"சம்பத் இறந்து போன இரண்டு நாட்களுக்கு பிறகு" என அதிரடியாய் துவங்குகிறது உறுபசி நாவல்.
நாவலை வாசிக்கும் நேரம் கல்லூரி நாட்களின் மறக்கப்பட்டிருந்த நண்பர்கள் கண்முன்னே நடமாடிக்கொண்டிருந்தார்கள். நாவல் முடிந்ததும் மீண்டும் தனித்துவிட்ட உணர்வு ஏற்பட்டது.

கதை நெடுகிலும் சம்பத்தும் அவன் நண்பர்களும் வியாபித்திருக்கிறார்கள். இறந்தது சம்பத்தாய் இருப்பினும் மிக வசதியாய் கதைக்குள் நம்மை பொருத்திக்கொள்ள முடிவதால் யாருமே அந்நியமாய் தெரியவில்லை.

நாவல் முழுவதும் மரணம் பனிக்குள் உறைந்த கடலென விரிந்திருக்கிறது.மரணத்திற்கு பின் துவங்கி மரணத்துக்கு பின்னே முடியும் கதையின் முடிவில் வாழ்விற்கான வெளிச்சத்துடன் நிறைத்திருப்பது ஆறுதலாயும் நம்பிக்கை தருவதாகவும் இருக்கிறது.

யாழினியும் ஜெயந்தியும் அழகாய் செதுக்கபட்டிருக்கும் கதாபாத்திரங்கள். யாராவது ஒருவருடன் நிச்சயம் நம்மை பொருத்தி பார்க்க தோன்றும். சம்பத்துடனான இருவரின் உறவை, வெவ்வேறு காலங்களுக்கும் சம்பத்தின் மாறாத அதே மனநிலை வெவ்வேறு விதமாக இருவரையும் எப்படி பாதிக்கிறது என சுலபமாய் ஒப்பிட்டு பார்க்க முடிகிறது. யாழினி மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவளாகவும் ஜெயந்தி சுழலில் சிக்கிய படகெனவும் பிம்பங்கள் உருவாகி வலுப்பெறத்துவங்கும் தருணத்தில் மெல்ல அவை கரைந்தும் போவது சுவாரஸ்யம்.

ஒருவன் மிகுந்த வலிகள் சுமந்து மின்விசிறி பார்த்தபடி நினைவுகளை அசைபோடுவது போல இருக்கிறது நாவல். எஸ். ராமகிருஷ்ணனின் கவித்துவமான நடையும், கதை சொல்லும் விதமும் சாவகாசமாய் யோசித்து உணர்ந்து உண்மைகாளை உள்வாங்கும் பக்குவத்தை உருவாக்கி விடுகிறது.

கதைக்காக படிப்பதானால் உறுபசியில் ஒன்றுமில்லை. கூடவே இருக்கும் மனிதர்களின் உணர்வுகளையும் சுபாவங்களையும் ருசித்து படிக்க விருப்பமிருப்பின், உறுபசி நல்ல அனுபவம்.

நாவல் : உறுபசி (எஸ்.ராமகிருஷ்ணன்)
விலை : ரூபாய் 75.00
பக்கங்கள் : 135
பதிப்பகம் :
உயிர்மை பதிப்பகம்,
11/29 # சுப்ரமண்யன் தெரு,
அபிராமபுரம், சென்னை - 18.

- அனிதா

2 comments:

சதங்கா (Sathanga) said...

ராமகிருஷ்ணன், எனக்குப் பிடித்த எழுத்தாளர்களுள் ஒருவர். தகவல்களுக்கு நன்றி.

சிங். செயகுமார். said...

இங்கே சிங்கை நூலகத்தில் இருந்தால் கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன்.