Thursday, January 03, 2008

சில கவிதைகள்..



கவிதைக்காரி

அத்தனை ஆர்வமாய் அந்த பரிசைப்
பிரித்திருக்க வேண்டியதில்லை
அவள் புகைப்படம் காட்டி சாயல்
ஒப்பிட்டிருக்கவும் வேண்டாம்

நான் கற்பித்துக்கொண்டிருந்த
என் இனிய பயணம்
இனியும் களிக்கும்படியாய் இருக்கப்போவதில்லை

விரல் பின்னி எனக்காய் இழுக்கும் கலை
கைவராதாயினும்
வெற்றிடங்களை உன் வெப்பத்தால்
நிறைப்பதும் சலித்தாகிவிட்டது

முத்தமூறி உன் முகமழிந்துவிட்ட
வெறும் அட்டைகளைப்பற்றி
இப்பொழுதாவது சொல்லிவிடுகிறேன்

தன்மை மறைந்து
அவந‌‌ம்பிக்கைக்குள் குறுகத்துவங்கும்
இந்த இரவில் என்னை நினைத்துக்கொள்
இதெல்லாமும் மீறி

உன்மீதான காதல் நிலைத்துவிடலாம்.


********************************************************************************************************


இல‌க்கு

அலுவல் களைப்பு உனக்கு.
எனக்கும்தான்.

இருந்தும்
உடைமாற்றும் நிமிடத்தில்
நீளலகு பறவை தலைமேல் வந்தமர்ந்தது

இருள் அப்பிய‌ குகைப் ப‌ய‌ண‌மும்
வௌவால்க‌ளின் துர்வாடையும் மீறி
சுக‌ம‌ளித்துக்கொண்டிருந்த‌ன‌
வ‌ழியெங்கும் கீறிக்கிட‌ந்த‌ சித்திர‌ங்க‌ள்

மீண்டும் ந‌ம்மை வீடு சேர்த்து
த‌ப்பிதோம் பிழைத்தோமென‌
ப‌ற‌ந்தோடிவிட்ட‌து ப‌ற‌வை
நீ இன்னும் என் முலைச் சுருக்க‌ங்க‌ளில் புதைந்திருக்கிறாய்

நினைவில் வ‌ந்த‌ ப‌சிக்கு
சில‌ புளித்த‌க் க‌னிக‌ளை உண்ணுகிறேன்
நீயும் ப‌சியாறு
ப‌ற‌வை எந்நேர‌மும் திரும்ப‌லாம்
இம்முறைக்கான‌ இல‌க்கு உன் த‌லையாய் இருக்க‌லாம்.


- அனிதா

நன்றி : குமுதம் தீராநதி

No comments: