
இந்த வலைப்பூவை துவங்கையில் இத்தனை நீண்ட இடைவேளை விழும் என நினைக்கவில்லை.
படித்துக்கொண்டிருப்பது மட்டுமே பிரதானமாய் இருந்தது அப்போது.
அலுவலகம் செல்கையில், தேநீர் பருகுகையில், விடுதியின் தனிமையில், பேருந்து பயணங்களில் என எப்பொழுதும் இடத்திற்கேற்றவாறு புத்தகங்கள் தேடிப் படித்துக்கொண்டிருந்தேன்.
தினம் தினம் கவிதை எழுதுவதெல்லாம் எனக்கு என்றுமே கைவந்ததில்லை. மெல்ல உணர்வாய் உருவாகி வார்த்தைகள் சேர்ந்து மனதை அழுத்திக்கொண்டிருந்து பின் தானாய் வெளிப்படும் வரை காத்திருப்பேன்.
அந்த நிலை உலகளாவிய செய்கைகளிலிருந்து அப்பார்பட்டதாகவே இருந்திருக்கிறது.
கவிதை தோன்றி எழுதும் வரை வேறு பிரதேசத்தில் உலவிவிட்டு, கவிதை முடிந்ததும் தரையிறங்குவது போன்ற மனநிலை. எதிர்பார்ப்புகளற்றுக் கழிந்துக்கொண்டிருந்த காலம் திருமணமானதும் மாறத்துவங்கியது. பிடித்தது பிடிக்காதது, எதை ஒப்புக்கொள்வது எதில் நிலைபாடுகள் மாறாமல் நிற்பதென தினம் புதிய கோணமாய் யோசனைகள் இத்தனை காலமாய் என்னை பற்றிய என்னுடைய புரிதல்களை கேள்வியெழுப்பத்துவங்கின..
விளிம்பிலிருந்து சற்று உள்ளே வந்து இருவர் இருக்கும் உலகிற்குள் இழைந்துக்கொள்வது எப்படியென புரிந்தபிறகு இருத்தல் அழகாகத்துவங்கியது. பிறகு அனன்யா பிறந்தாள். அதுவரை கூட என் கவிதைகள் என் இருத்தலை நோக்கித் திரும்பவில்லை. குழந்தை வந்த பிறகு அவளின் உலகம் புதியதாய் இருந்தது. அதனை அருகிருந்து பார்ப்பது இந்நிமிடம் வரை மாறாத ஆச்சர்யங்களை தந்துக்கொண்டு தான் இருக்கிறது. அது கவிதைக்குள்ளும் புகுந்துக்கொண்டது.
இப்பொழுது மீண்டும் ஒரு குழந்தை. இம்முறை அழகான ஆண் குழந்தை. இந்த பத்து மாதங்களும் நான் வலைப்பூ பக்கம் வரவில்லை.. ஏனெனில் இந்த குழந்தையும் அவளைப்போலவே எந்த சங்கடங்களும் இன்றி ஆரோக்கியமாய் இருக்கவும், குழந்தையுடன் முழு பொழுதையும் கழித்து நினைவுகள் சேகரிப்பதிலும் உறுதியாயிருந்தேன்.
இன்று கணவர், ஒரு பெண் ஒரு ஆண் குழந்தை என வாழ்க்கை முழுமைபெற்றிருக்கிறது.
என்னுடன் என் வலைப்பூவும் நல்ல நண்பர்களும் பயணித்துக்கொண்டிருப்பது பெரும் பலமாயிருக்கிறது.
நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
- அனிதா
4 comments:
அன்பு அனிதா ,மனம் நிறைந்த வாழ்த்துகள். குழந்தைகளையும் தாண்டி ஒரு கவிதை அமைய முடியுமா:)
வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்..
Welcome back.. :)
Gr8 News, Wish You all the Best Anitha
Anithu
Manamaarndha Vaazhthukkal :)
Maha
Post a Comment