Monday, March 04, 2013

வாசம்

நான் தூங்கிட்டேம்மா
இருளில் கன்னம் தடவுகிறாள் மகள்
உறங்கும் குழந்தைக்கு வாசமிருக்கிறது
இறைந்து விழுந்தோடும் அருவியின் வாசம்
குளிர் காய எரியும் மென் தீயின் வாசம்
தூறல் புகைத்த செம்மண் வாசம்
போலவே தீர்க்கமானது
உறங்கும் குழந்தையின் வாசம்
அம்மாவுக்கு தெரியும் நீ தூங்கவில்லை என்றதும்
சிரித்தபடியே உறங்கிப்போகிறாள்
கணங்கள் நகர்த்தாமல் விழித்துக்கிடக்கும் என்னை
தலை தடவி உறங்கச்செய்கிறது கடவுள்.
நான் அறியுமுன்னே
அறையெங்கும் பரவியிருக்கிறது அனிச்சைவாசம்.

No comments: