Tuesday, January 30, 2007

நா.முத்துகுமாரும் கோலிவுட் கோர்ட்டும்

சமீபத்தில் ஒரு தனியார் தொலைகாட்சியில் நா.முத்துகுமாருடன் சந்திப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. என்னை பாதித்த கவிதைகளில் ஒன்றாய் அவருடைய 'தூர்' கவிதை இன்னமும் இருப்பதாலும், வெயில் படத்தின் வெயிலை உருவகப்படுத்திய பாடலும், உருகுதே மருகுதே பாடலும் முற்றிலும் வெவ்வேறு பரிமாணங்களில் திகட்டாமல் கேட்க முடிவதாலும், ஒரு வளரும் கவிதாயினியின் ஆர்வத்தோடு அந்நிகழ்ச்சியை பார்க்கத்துவங்கினேன். அத்தனை ஆர்வமும் பத்தே நிமிடங்களில் போய்விட்டது.

ஒரு கவிஞனுக்கும் எழுத்தாளனுக்கும் தரக்கூடிய அதிகபட்ச தண்டனை அவனை கேள்வி கேட்பதும் அதற்கு ஒரு வரியில் பதில் எதிர்பார்ப்பதும் தானோ என்று நிகழ்ச்சியின் ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைத்தது. நீங்கள் எத்தனை பாடல்கள் எழுதியிருக்கிறீர்கள் (600) என்று ஆரம்பித்து பிடித்த இசையமைப்பாளர் யார் (எல்லோரையும் பிடிக்கும்), ஏன் தத்துவ பாடல்கள் எழுதுவதில்லை (கதைகள் வருவதில்லை), கவிதைகளுக்கும் திரைப் பாடல்களுக்குமான வித்தியாசங்கள் என்ன (எழுத்து சுதந்திரம்), இசையில் வார்த்தைகள் புதைந்துவிடுவது பற்றிய அபிப்பிராயம் (???) என்று பல ஆண்டுகளாய் கேட்கப்பட்டுவரும் அதே புளித்த கேள்விகள் தான். இதற்கெல்லாம் பதிலளிக்க முத்துக்குமார் தேவையா என்று தெரியவில்லை.

நீங்கள் ஜென் தத்துவங்களில் ஈடுபாடு கொண்டிருப்பதனால் அவைகளை உங்கள் பாடல்களில் உபயோகிக்கின்றீர்களா என்றார் பேட்டி எடுப்பவர். எந்த தத்துவமாயினும் நிகழ்வுகளாயினும் ஒரு மனிதன் உள்வாங்கி பின் வெளிப்படுத்தும்போது அவனுடைய தனிபட்ட கருத்துக்களும் அதில் சேர்ந்துக்கொள்ளும் என்பதுத் தெரிந்ததே. ஆக, பாடல்களில் வரும் தத்துவங்கள் தத்துவங்களாய் இல்லாமல் அவைகளின் பாதிப்புகளாய் இருக்கின்றன என்று சொல்ல முயற்சித்தார் கவிஞ‌ர். எல்லோரும் புரிந்துக்கொண்டிருப்பார்களா என்பது சந்தேகமே.

நிகழ்ச்சியின் இறுதி வரை பதினெட்டிலிருந்து இருபது வயது வரையான நாற்பது இளைஞ‌ர்கள் அங்கேயே அமர்ந்திருக்கிறார்கள். கேள்வி கேளுங்கள் என்றதும் கேட்டார்கள். என்ன பதில் சொன்னாலும் ஏற்று கொண்டு மைக்கை அடுத்தவர்க்கு கொடுத்தார்கள். யாருமே இயல்பாய் இல்லாத இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஒரு இலக்கியவாதியோ பாடலாசிரியனோ எவ்வளவு தூரம் தங்கள் எண்ணங்களையும், பார்த்த‍, கேட்ட,படித்த விஷயங்களையும் பகிர்ந்துக்கொள்ள முடியும்?

மற்றபடி நா.முத்துகுமாரின் புத்தகங்கள் பற்றிய‌ கேள்வியும், இடைவெளியில் சேனல் மாற்றியதில் பார்த்த அவரது பாடல்களும் நன்றாக இருந்தன. ஆழ்ந்த கருத்துக்களும் சுவையான சிந்தனைகளையும் வைத்திருக்கும் நபர்களிடமிருந்து மனம்திறந்த பதில்கள் வரவழைக்கும் இன்னும் செறிவான கேள்விகளுக்கு சற்றே மெனக்கெடலாம் என்று தோன்றுகிறது.

6 comments:

கோவி.கண்ணன் said...

கொஞ்சம் பத்திப் பிரிச்சு பத்திப் பத்தியாக எழுதுங்க. இப்படி ஒரே பாராவாக பார்த்தால் படிக்க மழைப்பாக இருக்கு !

Anitha Jayakumar said...

ippo bettera? :)

கார்த்திக் பிரபு said...

நானும் அந்த நிகழ்ச்சி பார்த்தேன்..எனக்கு பிடித்த கவிஞர் என்பதால்...

நீங்கள் சொன்ன அத்தனை குறைகளையும் நானும் கவனித்தேன்..இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் வரும் பார்வையாளர்கள் என்ன பாவம் செயதார்களோ...

டிவிக் காரர்கள் சொல்லி கொடுக்கும் அந்த ஸ்லொகன்களை அப்பொ அப்போ சொல்ல மட்டும் தான் அவர்கள்..

நல்ல பதிவு வாழ்த்துக்கள் இந்த மாதிரி நிறைய எழுதுங்க .,.

Anonymous said...

hi anitha....
was simply good ...reflects how any literary person will be irritated on watchin that show ...commercial programmes always turn out to be void with writers ...

மஞ்சூர் ராசா said...

இது போன்ற நிகழ்ச்சிகளில் பார்வையாளர்கள் சுதந்திரமாக கேள்விகள் கேட்க முடியாது. எல்லாமே நடத்துபவர் சொல்வது போலத்தான் செய்யவேண்டும். நாம் என்ன கேட்கிறோம் என்பதையும் முதலிலேயே சொல்லிவிடவேண்டும். அவர்கள் தான் இறுதி முடிவு எடுப்பார்கள்.
பொதுவாக இப்படித்தான் நடக்கிறது.

கருப்பு said...

உருகுதே மருகுதே அபாரம் அனி. அத்தோடு பசுபதி கூத்துப் பட்டறையில் நாசருடன் பயிற்சி பெற்றவராம்..

என்னமா நடித்து இருந்தார் வெயிலில்.

அந்த பாடலை இன்னும் என் வாய் முனுமுனுத்துக் கொண்டே இருக்கிறது!