Tuesday, February 12, 2008

இரு க‌விதைக‌ள்



ஏனென்றால்


ஊற‌ப்போட்ட‌ அரைம‌ணியில்
துவைத்து உல‌ர்த்திவிட்டேன்
திர‌ண்டு வ‌ரும் மேக‌ம் எந்நேர‌மும்
கொட்ட‌த்துவ‌ங்கும்

அல்ல‌து ச‌ட்டென‌ க‌லைந்தும் போக‌லாம்
ச‌தை துளைக்கும் வெயில் இற‌ங்கி
ஈர‌ம் உறிந்து வெளுக்க‌டிக்க‌லாம்

எத்த‌னை அழைத்தும் கீழிற‌னங்காம‌ல்
மொட்டைமாடியிலேயே அம‌ர்ந்திருக்கிறேன்

கார‌ண‌ங்க‌ள் கோர்த்தே ச‌க‌ல‌மும் செய்யும் என்
தோழிக‌ளுக்கு ம‌ட்டும் சொல்கிறேன்
வாக‌ன‌ப் புகையில் திண‌றித் த‌ப்பித்த‌ காற்று
வ‌றுத்த‌ க‌ட‌லை வாச‌ம் சும‌ந்து
என் துணிக‌ளை முத‌லில் உல‌ர்த்த‌
இப்போது வ‌ரும்



என் ம‌க்க‌ள்


விள‌ம்ப‌ர‌ப் ப‌ல‌கைக‌ளை
வாய் பிள‌ந்து வெறித்த‌ப‌டி ந‌க‌ர்கிற‌து
இந்த‌ ம‌ழைப்ப‌ய‌ண‌ம்

கூரைத் தொட்டு துருக்க‌ம்பிக‌ளில் வ‌ழிந்து
தொடைந‌னைக்கும்
ஜ‌ன்ன‌லோர ஈர‌ம் உத‌டு சுழிக்க‌ச்செய்கிற‌து

மிக‌மெல்லிய‌ இசையாலும் குறைக்க‌
முடிய‌வில்லை
அக‌ண்ட‌ தோள் சாய்ந்து ம‌ழை ர‌சிக்கும்
முன்னிருப்ப‌வ‌ள் மீதான‌ துவேஷ‌த்தை

ப‌ய‌ண‌ச்சீட்டை மோதிர‌ இடுக்கில் சொருகி
இருந்த‌வ‌ளின்
ப‌ட்டைச்ச‌ரிகைக்கு பொருந்தாத‌
நிற‌க்க‌ல‌வைப்ப‌ற்றி
சொல்ல‌லாமென்றிருந்த‌போது

ம‌ண‌ற்சூடு அட‌ங்காத குறுகியத்
தெருமுனையில்
ந‌லுங்காம‌ல் இற‌க்கிவிட்டு
ம‌ற்ற‌ங்க‌ளின்றி ப‌ய‌ணிக்கிறார்க‌ள்
இத்த‌னை நேர‌மும் த‌னிமை தீண்டாது
என்னை தாங்கிப் பிடித்திருந்த‌

என் ம‌க்க‌ள்


ந‌ன்றி : புதிய‌ காற்று

Thursday, January 17, 2008

சில கவிதைகள்


புதிய பார்வை பொங்கல் சிறப்பிதழில்.. (ஜனவரி 16-31 , 2008 )


1. குளத்துப் பறவை
தங்கம் தெளித்த கோவில் குளத்தில்
நீர் கிழிக்காமல் ஊர்ந்துக் கொண்டிருந்தன‌
வெள்ளைப் ப‌ற‌வைக‌ள்
க‌ல்லெடுத்துத் த‌ண்ணீர் குழிக‌ள் ப‌றித்துக்கொண்டிருந்த‌வ‌ன் மேல்
எச்ச‌ம் க‌ழித்து ப‌ற‌ந்த‌து இன்னுமொன்று.
ஏதோ அத‌னாலிய‌ன்ற‌து.

2. இந்த இரவில்
ஒரு நினைவு மக்கத் துவங்கியிருக்கிறது
மின்விசிறி வேகத்தில் கலைகிறது
இன்று முடிக்கவியலாத வேலையொன்று
கொடியில் குவிந்த ஆடைகளுள் ஒளிந்துகொள்கிறது
காலையில் பிச்சை கேட்டவன் முகம்
குளியலறை நீரோடு ஆவியாகிவிடுகின்றன‌
காழ்ப்புண‌ற்சிகள்

விடிய‌ல் உள்ளிழுத்துக்கொண்ட‌ ம‌ண் ஈர‌ம் ம‌ட்டும்
இன்னும் க‌ன‌வினில் ம‌ண‌க்கிற‌து.

3. யாருமற்ற நிழல்
கடைத்தெருவில் மிதிபடும் நிழல்களை
கசந்து வெறித்தபடி தனியே உறுமிக்கொண்டிருந்தது அது.
மிருகமோ பறவையோ
எதனுடனும் பொருந்திவிடாமல்
உடலற்று இறுகியிருந்தது.

வெறிப்பிடித்ததென்றும் ரத்தம் குடிக்குமென்றும்
மிரட்சியாய் பேசிக்கொண்டார்கள்
தன்னிலிருந்து பிரிந்துவிடாத நிழல் வைத்திருந்தவர்கள்

நிசப்தம் பொழிந்துக்கொண்டிருந்த முட்புதரில்
வேரென படர்ந்திருந்ததின் நெற்றி தேடி முத்தமிட்டு
என்னவாயிற்று என்றேன் சன்னமாய்
இறந்துவிட்டதாய் சொன்னது
என் உதடுவழிந்த குருதியைத் துடைத்தெடுத்தபடி

புரிந்ததென கண்சிமிட்டி நகர்ந்த கணத்தில்
தடையங்க‌ளின்றி கரைந்துவிட்டது.

4.காட்டுக்கு சொந்தக்காரன்
உதிரும் இலைகள் ஒவ்வொன்றாய் எடுத்து
மீண்டும் மரத்தில் பதித்தாய்
உன் விரல்பட்ட சருகுகள் பச்சை நிறமாயின

பழுப்படைந்த இறகுகளின் வண்ண சலிப்பை
பூக்கள் பிழிந்து நிறம் மாற்றினாய்

காடறுக்க வந்தவனை மலரதிராது சவமாக்கினாய்
மலையேறி குழி இறங்கி
மூளை மங்க உணவு பரிமாறினாய்
நாசிக்குள் பனி உரிந்தபடி
உள்ளங்கை வெப்பம் உணர்த்தினாய்

இன்னும்
குகை புகும் ரயிலின் வெளிச்சமாய்
விரைத்த விரல்களினூடே
ஒழுகும் நினைவுகளாய்
முறிக்கும் சோம்பலில் நிறைந்த திமிராய்
என்னன்னவாயோ நீ இருக்கிறாய்

இருந்தும் சருகுகள் சருகுகளாயும்
மங்கிய சிறகுகள் மங்கியவையாவும்
செரிக்கின்ற மெல்லுணவும்
எனக்குப் பிடிக்கும்

நினைவில் கொள்
நான் ஒருபோதும் எழுதப்போவதில்லை
உனக்கான கவிதைகளை.


ந‌ன்றி : புதிய‌ பார்வை

Thursday, January 03, 2008

சில கவிதைகள்..



கவிதைக்காரி

அத்தனை ஆர்வமாய் அந்த பரிசைப்
பிரித்திருக்க வேண்டியதில்லை
அவள் புகைப்படம் காட்டி சாயல்
ஒப்பிட்டிருக்கவும் வேண்டாம்

நான் கற்பித்துக்கொண்டிருந்த
என் இனிய பயணம்
இனியும் களிக்கும்படியாய் இருக்கப்போவதில்லை

விரல் பின்னி எனக்காய் இழுக்கும் கலை
கைவராதாயினும்
வெற்றிடங்களை உன் வெப்பத்தால்
நிறைப்பதும் சலித்தாகிவிட்டது

முத்தமூறி உன் முகமழிந்துவிட்ட
வெறும் அட்டைகளைப்பற்றி
இப்பொழுதாவது சொல்லிவிடுகிறேன்

தன்மை மறைந்து
அவந‌‌ம்பிக்கைக்குள் குறுகத்துவங்கும்
இந்த இரவில் என்னை நினைத்துக்கொள்
இதெல்லாமும் மீறி

உன்மீதான காதல் நிலைத்துவிடலாம்.


********************************************************************************************************


இல‌க்கு

அலுவல் களைப்பு உனக்கு.
எனக்கும்தான்.

இருந்தும்
உடைமாற்றும் நிமிடத்தில்
நீளலகு பறவை தலைமேல் வந்தமர்ந்தது

இருள் அப்பிய‌ குகைப் ப‌ய‌ண‌மும்
வௌவால்க‌ளின் துர்வாடையும் மீறி
சுக‌ம‌ளித்துக்கொண்டிருந்த‌ன‌
வ‌ழியெங்கும் கீறிக்கிட‌ந்த‌ சித்திர‌ங்க‌ள்

மீண்டும் ந‌ம்மை வீடு சேர்த்து
த‌ப்பிதோம் பிழைத்தோமென‌
ப‌ற‌ந்தோடிவிட்ட‌து ப‌ற‌வை
நீ இன்னும் என் முலைச் சுருக்க‌ங்க‌ளில் புதைந்திருக்கிறாய்

நினைவில் வ‌ந்த‌ ப‌சிக்கு
சில‌ புளித்த‌க் க‌னிக‌ளை உண்ணுகிறேன்
நீயும் ப‌சியாறு
ப‌ற‌வை எந்நேர‌மும் திரும்ப‌லாம்
இம்முறைக்கான‌ இல‌க்கு உன் த‌லையாய் இருக்க‌லாம்.


- அனிதா

நன்றி : குமுதம் தீராநதி

Tuesday, December 04, 2007

சில கவிதைகள்...

துரோகம்

அகால வேளையின்
நம்பிக்கை திரை கிழித்துக்கொண்டு
ஒரு பொய் பிறக்கிறது

பின் மற்றொன்று
மற்றுமொன்று.

பிணவறையின் சவங்களாய்
வரிசையாய் பொய்கள்
குளிர்ந்து
விறைத்து
உணர்வற்று.

சரி நம்புகிறேன்.
இப்பொழுது தள்ளி படு.


யாருமற்ற விடியல்

மார்பும் வயிறும் தொடைகளும்
அதனதன் கனத்தில் அழுந்தியிருக்க
குப்புற கிடந்தது என் உடல்.

உள்தாழிட்ட அறைக்குள் அரைக்கண் மூடிய முகம்
உணர்வுகளற்று வெளிறியிருப்பது
இதுவரை யாருக்கும் தெரியாது.
அதையே உற்றுப் பார்த்து சலித்துப்போனவளாய்
நீரூறி பெருத்த கழிவறை கதவிடுக்கில் நுழைந்து
வென்டிலேட்டர் வழியாய்
பறந்து வெளியேறினேன்.

கூரை வேய்ந்து மழை ஒழுகும் திரையரங்கிலும்
சாவகாசமாய் தெருவோரத் திருநங்கையிடம் பேசிக்கொண்டும்
மரமேறி பெயர் தெரியாத மிருகத்தின்
கடைசி கலவி ரசித்தபடியும் சுற்றி வந்தேன்.

சில மணி நேரங்களில்
பசியில் குழைந்தழைத்த உடலுக்குள் புகுந்து கொண்டு
சமைக்கத் துவங்கினேன்.


சுழற்சி

இது நிகழாதிருக்க வேண்டும்
இம்முறையாவது.

அங்குலம் அங்குலமாய் வெப்பம் பரவி
தீ கனன்று அனல் துவங்கும்
ஐந்து விரல் அனிச்சயாய் மடங்கி
ரேகைக்குள் குழி பறிக்கும்
மரங்கள் மெலிந்து கொடிகளாகி
கொடிகள் வளைந்து நாணலாகும்

வீடு அதிர்ந்து அதிர்ந்து அடங்கும்
தூண்கள் வலுவின்றி சரியத் துவங்கும்
முற்றத்து துளசி மாடம்
சமயம் பார்த்து ஓடி ஒளியும்

எனினும் வீடும் அழியபோவதில்லை
காடும் கருகபோவதில்லை
யாரையும் ஈர்க்கவில்லை எந்த ஒரு நிகழ்வும்

பேருந்து நெரிசலின் சலனம் தாண்டி
சன்னமாய் உதிர்கின்றன
ஒரு குழந்தைக்கான ஆயத்தங்கள்.

- அனிதா

நன்றி : உயிரெழுத்து

Wednesday, November 14, 2007

எண்ணங்கள்

ஒன்பது மணி அலுவலக வாகனத்தில்
திணிக்கப்பட்ட ஆண் வாடையில்
ஐந்தாவதாய் ஒட்டிக்கொள்ள நான்.

இந்த அரைமணியில்
இருண்ட பனிகாற்றை சுவாசித்தபடி பயணிக்கலாம்
பிடித்த பாடலொன்றை முணுமுணுக்கலாம்
கிழித்தபடி பின்னகரும் கடைதெருவுக்காய் மிர‌ளலாம்

யாரோ பேசும் செல்போனின்
ம‌றுமுனை குரலை உற்று கேட்க‌லாம்
முடிந்துவிட்ட‌ காத‌ல்க‌ளை வெறுமே அசைபோட‌லாம்

இருந்தும்
உண‌ர்வ‌ற்ற‌ தொடை உர‌ச‌லை பொருட்ப‌டுத்திய‌வ‌ள்போல்
என் இருத்த‌லை
வேண்டுமென்றே அசெள‌க‌ரிய‌மாக்கிக் கொள்கிறேன்

ம‌ற்ற‌ மூவ‌ரின் சுவார‌ஸ்யத்திற்காக‌வேனும்.

- அனிதா

நன்றி : புதிய பார்வை