திருநங்கைகளின் உரிமை குரல்களையும், அவர்களுக்கான போராட்டங்களையும் மிக சிலரே திரும்பி பார்க்கிறார்கள். திருநங்கைகள் பற்றி பெரும்பாலான மக்களுக்கு தெரிந்ததெல்லாம் அவர்கள் வடநாட்டு ரயில்களில் பிச்சை எடுப்பார்கள் என்றும், விபச்சாரம் செய்வார்கள் என்றும், கூவாகத்தில் திருவிழா நடத்துவார்கள் என்றும் தான். அந்த செய்திகள் கூட இரட்டை தலையுடன் பிறந்த குழந்தை போலவோ குட்டை பாவாடை அழகியின் நடுபக்க புகைப்படம் போலவோ வெறும் ஆர்வம் ஈர்ப்பவை. வலியறியாதவை.
போன மாதம் பெங்களூருவின் பிரதான சிக்னல் அருகே ஒரு திருநங்கை ஒரு காய்கறி விற்பவளுடன் வெகு சகஜமாக பேசுவதை பார்த்தேன். வீட்டு வேலைகள் எல்லாம் முடிந்து, சாயங்காலத்தில் ஊர் கதை பேசும் இரெண்டு பெண்களை போல அத்தனை இயல்பாக பேசிக்கொண்டிருந்தார்கள். அவளும் ஊர் கதை பேசியிருக்க கூடும். விலைவாசிப்பற்றி பேசியிருக்கக்கூடும். அரசியல் கூட பேசியிருக்கலாம்.
வித்யாவின் வலைப்பூவை(http://www.livingsmile.blogspot.com/ )எனக்கு சில மாதங்களுக்கு முன்பு யாரோ காட்டியபோது கூட "இதை எழுதறது ஒரு அரவாணி" என்றார்கள். திருநங்கை எழுதுவதாலேயே கவனம் பெற்றது அந்த வலைப்பூ. இன்று அவருக்கு பெரிதாய் உதவமுடியாவிடினும் அவரை சக வலைப்பதிவராக, கருணை கண்ணோட்டம் தவிர்த்து இயல்பாய் ஏற்றுக்கொண்டிருக்கிறாகள். வலைப்பூ எழுதுபவர்கள் மத்தியிலும் புத்தகம் படிப்பவர்கள் மத்தியிலும் வித்யாவால் இன்று அரவாணிகள் குறித்தான பார்வை ஆரோக்கியமாக மாறியிருப்பது உண்மை. ஆனால் சமூகத்தில் இந்த வெளிச்சம் பரவிய இடங்கள் மிக மிக குறைவு.
திருநங்கைகளைப் பற்றி அதிகம் பரவ வேண்டிய இடங்கள் நம் குடும்பங்களும், நாளைய மன்னர்கள் எனக் கூறப்படும் இளைஞர் சமுதாயத்திலும் தான். சீரியலிலும், கணினித்துறையிலும் கால் சென்டர்களிலும் முடங்கி கிடக்கும் இவர்களில் நிறைய பேருக்கு நேரமிருப்பதில்லை, இருந்தாலும் படிக்கும் வழக்கமில்லை, படித்தாலும் ஆங்கில மர்ம நாவல்களிலும் வார பத்திரிக்கை விட்டுகளிலும் தேங்கி விடுகிறார்கள். வாழ மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் இவர்களைபோன்றவர்கள் மத்தியில் திருநங்கைகள் பற்றிய பார்வைகளை மாற்றுவது மிகவும் தேவையான, அதே நேரம் மிக கடினமான வேலையாகிறது.
வெளிச்சம் பரப்பும் மகிழ்ச்சியான அதிரடியான நிகழ்ச்சியாக துவங்கியிருக்கிறது "இப்படிக்கு ரோஸ்". அந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் கேட்டார் - இது இங்கலிஷ் கூட பேசுதே என்று. அவள் பேசுவதும் தன்னை முன்னிறுத்தும் விதமும் நான் வேற்று கிரகவாசி இல்லை, உங்களில் ஒருத்தி என்பதை உணர்த்துவதாக இருக்கிறது. தள்ளி நின்றே இத்தனை நாளும் இவர்களை பார்த்தவர்களுக்கு வரும் சந்தேகங்களும் ஆச்சர்யங்களும் இருக்கத் தான் செய்யும்.. இருக்கட்டும். இது ஆரம்பம் தான்.
இந்த நிகழ்ச்சியில் அரவாணிகளின் கவலைகளை பகிர்ந்துக்கொள்வதில்லை. மாறாக, ரோஸ் என்ற திருநங்கை சமூகத்தில் நடக்கும் பல விஷயங்களையும் விவாதிக்கிறாள், நேருக்கு நேராய் கேள்விகள் கேட்கிறாள். ஆசுவாசபடுத்துகிறாள், நம்பிக்கையூட்டுகிறாள். சாவகாசமாக ஒரு திருநங்கையை பார்ப்பது, அவள் குரலை கேட்பது, அவளை உற்று நோக்குவது என போதுமான அறிமுகங்கள் கிடைக்கின்றன. அவர்களை சாதாரண மனிதர்களாக பார்க்க பழகும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. தடைகள் களைந்து மெல்ல வெளிவருகிறார்கள். அந்த திருநங்கையின் மீதிருந்து கவனம் அகன்று அவள் பேசும் விஷயத்திற்கு மெல்ல நகரத்துவங்கியிருப்பதை நிகழ்ச்சியை பார்க்கும் பலரும் உணர்ந்திருப்பார்கள்.
நமக்கு நடக்காது என்ற மனோபாவம் நம் எல்லோரிடமும் இருப்பதுதான் மனத்தடைகளுக்கு காரணம். மனத்தடைகளால் விளையும் குழப்பமும், குழப்பத்தால் பயம் விளைவதும், பயத்தால் திருநங்கைகளை வீட்டிலிருந்து புறக்கணிப்பதும் நிகழ்கிறது. வித்யாவின் வீட்டாரோ ரோஸின் வீட்டாரோ அவர்களின் வளர்ச்சியிலும் துணிச்சலிலும் எத்தனை பூரித்துபோவார்களென தெரியவில்லை.
ஒரு திருநங்கை உருவாகிறாளென அறிந்துக்கொள்வது அத்தனை கடினமல்ல. உடல்ரீதியான, மனரீதியான குழப்பங்களால் நம் குழந்தை தனிமைபடுமேயானால் சில நாள் கவனம் குவித்து கண்காணிக்கலாம். ஒரு பெண் பருவத்திற்கு வரும்போது பயப்படாதேம்மா இது ஒன்றும் இல்லை சரியாகிடும் என்று சாதாரணமாக கவுன்ஸிலிங் செய்வதில்லையா?
பெற்றோருக்கு தெரியவில்லையெனில் திருநங்கையாக மாறுபவர்களுக்கென நிறைய கவுன்சலிங் வழங்கபடுகிறது. இங்கு முதலில் நடக்க வேண்டியது பயம் களைதல், பெற்றோருக்கும், குழந்தைக்கும். பல வருடங்களாக தன்னை ஒரு பாலோடு இணைத்து யோசித்த குழந்தைக்கு பால் மாறும்போது மிகுந்த பாதுகாப்பும், நம்பிக்கையும் தேவையாயிருக்கும். மருத்துவரீதியாக குழந்தைக்கு என்னன்ன வேண்டுமோ செய்யலாம். விபத்தில் அடிபட்டு உயிருக்கு ஒரு குழந்தை போராடுமேயானால் எத்தனை செலவு செய்தும் காப்பாற்றுவதில்லையா?
திருநங்கைகள் உருவாவதை தடுக்கமுடியாவிடினும் அவர்களை ஒரு குடும்பத்திலிருந்து விலக்காமல் ஏற்றுக்கொள்வோமென்றால் அதுவே அவர்கள் வாழ்வை சீராக்குவதற்கான முதல் முயற்சி. இப்பொழுது கணிணித்துறையில் எங்கும் ஜாதி பார்ப்பதில்லை. பாலின பேதங்கள் இல்லை. ஆரோக்கியமாகவும் விரிவாயும் சிந்தித்தோமென்றால், திருநங்கைகளை பக்கத்து கேபினிலோ, ரயிலுக்கு நம் முன்னே பயணசீட்டு எடுத்துக்கொண்டோ, கட்சி ஊர்வலங்களிலோ, மல்டிப்ளக்ஸ் தியேட்டர்களிலோ குடும்பத்துடனோ நண்பர்களுடனோ உறுத்தாமல் பார்க்க முடியலாம். காலம் மாறும்.
Wednesday, March 26, 2008
Tuesday, February 12, 2008
இரு கவிதைகள்

ஏனென்றால்
ஊறப்போட்ட அரைமணியில்
துவைத்து உலர்த்திவிட்டேன்
திரண்டு வரும் மேகம் எந்நேரமும்
கொட்டத்துவங்கும்
அல்லது சட்டென கலைந்தும் போகலாம்
சதை துளைக்கும் வெயில் இறங்கி
ஈரம் உறிந்து வெளுக்கடிக்கலாம்
எத்தனை அழைத்தும் கீழிறனங்காமல்
மொட்டைமாடியிலேயே அமர்ந்திருக்கிறேன்
காரணங்கள் கோர்த்தே சகலமும் செய்யும் என்
தோழிகளுக்கு மட்டும் சொல்கிறேன்
வாகனப் புகையில் திணறித் தப்பித்த காற்று
வறுத்த கடலை வாசம் சுமந்து
என் துணிகளை முதலில் உலர்த்த
இப்போது வரும்
என் மக்கள்
விளம்பரப் பலகைகளை
வாய் பிளந்து வெறித்தபடி நகர்கிறது
இந்த மழைப்பயணம்
கூரைத் தொட்டு துருக்கம்பிகளில் வழிந்து
தொடைநனைக்கும்
ஜன்னலோர ஈரம் உதடு சுழிக்கச்செய்கிறது
மிகமெல்லிய இசையாலும் குறைக்க
முடியவில்லை
அகண்ட தோள் சாய்ந்து மழை ரசிக்கும்
முன்னிருப்பவள் மீதான துவேஷத்தை
பயணச்சீட்டை மோதிர இடுக்கில் சொருகி
இருந்தவளின்
பட்டைச்சரிகைக்கு பொருந்தாத
நிறக்கலவைப்பற்றி
சொல்லலாமென்றிருந்தபோது
மணற்சூடு அடங்காத குறுகியத்
தெருமுனையில்
நலுங்காமல் இறக்கிவிட்டு
மற்றங்களின்றி பயணிக்கிறார்கள்
இத்தனை நேரமும் தனிமை தீண்டாது
என்னை தாங்கிப் பிடித்திருந்த
என் மக்கள்
நன்றி : புதிய காற்று
Thursday, January 17, 2008
சில கவிதைகள்
புதிய பார்வை பொங்கல் சிறப்பிதழில்.. (ஜனவரி 16-31 , 2008 )
1. குளத்துப் பறவை
தங்கம் தெளித்த கோவில் குளத்தில்
நீர் கிழிக்காமல் ஊர்ந்துக் கொண்டிருந்தன
வெள்ளைப் பறவைகள்
கல்லெடுத்துத் தண்ணீர் குழிகள் பறித்துக்கொண்டிருந்தவன் மேல்எச்சம் கழித்து பறந்தது இன்னுமொன்று.
ஏதோ அதனாலியன்றது.
2. இந்த இரவில்
ஒரு நினைவு மக்கத் துவங்கியிருக்கிறது
மின்விசிறி வேகத்தில் கலைகிறது
இன்று முடிக்கவியலாத வேலையொன்று
கொடியில் குவிந்த ஆடைகளுள் ஒளிந்துகொள்கிறது
காலையில் பிச்சை கேட்டவன் முகம்
குளியலறை நீரோடு ஆவியாகிவிடுகின்றன
காழ்ப்புணற்சிகள்
விடியல் உள்ளிழுத்துக்கொண்ட மண் ஈரம் மட்டும்
இன்னும் கனவினில் மணக்கிறது.
3. யாருமற்ற நிழல்
கடைத்தெருவில் மிதிபடும் நிழல்களை
கசந்து வெறித்தபடி தனியே உறுமிக்கொண்டிருந்தது அது.
மிருகமோ பறவையோ
எதனுடனும் பொருந்திவிடாமல்
உடலற்று இறுகியிருந்தது.
வெறிப்பிடித்ததென்றும் ரத்தம் குடிக்குமென்றும்
மிரட்சியாய் பேசிக்கொண்டார்கள்
தன்னிலிருந்து பிரிந்துவிடாத நிழல் வைத்திருந்தவர்கள்
நிசப்தம் பொழிந்துக்கொண்டிருந்த முட்புதரில்
வேரென படர்ந்திருந்ததின் நெற்றி தேடி முத்தமிட்டு
என்னவாயிற்று என்றேன் சன்னமாய்
இறந்துவிட்டதாய் சொன்னது
என் உதடுவழிந்த குருதியைத் துடைத்தெடுத்தபடி
புரிந்ததென கண்சிமிட்டி நகர்ந்த கணத்தில்
தடையங்களின்றி கரைந்துவிட்டது.
4.காட்டுக்கு சொந்தக்காரன்
உதிரும் இலைகள் ஒவ்வொன்றாய் எடுத்து
மீண்டும் மரத்தில் பதித்தாய்
உன் விரல்பட்ட சருகுகள் பச்சை நிறமாயின
பழுப்படைந்த இறகுகளின் வண்ண சலிப்பை
பூக்கள் பிழிந்து நிறம் மாற்றினாய்
காடறுக்க வந்தவனை மலரதிராது சவமாக்கினாய்
மலையேறி குழி இறங்கி
மூளை மங்க உணவு பரிமாறினாய்
நாசிக்குள் பனி உரிந்தபடி
உள்ளங்கை வெப்பம் உணர்த்தினாய்
இன்னும்
குகை புகும் ரயிலின் வெளிச்சமாய்
விரைத்த விரல்களினூடே
ஒழுகும் நினைவுகளாய்
முறிக்கும் சோம்பலில் நிறைந்த திமிராய்
என்னன்னவாயோ நீ இருக்கிறாய்
இருந்தும் சருகுகள் சருகுகளாயும்
மங்கிய சிறகுகள் மங்கியவையாவும்
செரிக்கின்ற மெல்லுணவும்
எனக்குப் பிடிக்கும்
நினைவில் கொள்
நான் ஒருபோதும் எழுதப்போவதில்லை
உனக்கான கவிதைகளை.
நன்றி : புதிய பார்வை
Thursday, January 03, 2008
சில கவிதைகள்..
கவிதைக்காரி
அத்தனை ஆர்வமாய் அந்த பரிசைப்
பிரித்திருக்க வேண்டியதில்லை
அவள் புகைப்படம் காட்டி சாயல்
ஒப்பிட்டிருக்கவும் வேண்டாம்
நான் கற்பித்துக்கொண்டிருந்த
என் இனிய பயணம்
இனியும் களிக்கும்படியாய் இருக்கப்போவதில்லை
விரல் பின்னி எனக்காய் இழுக்கும் கலை
கைவராதாயினும்
வெற்றிடங்களை உன் வெப்பத்தால்
நிறைப்பதும் சலித்தாகிவிட்டது
முத்தமூறி உன் முகமழிந்துவிட்ட
வெறும் அட்டைகளைப்பற்றி
இப்பொழுதாவது சொல்லிவிடுகிறேன்
தன்மை மறைந்து
அவநம்பிக்கைக்குள் குறுகத்துவங்கும்
இந்த இரவில் என்னை நினைத்துக்கொள்
இதெல்லாமும் மீறி
உன்மீதான காதல் நிலைத்துவிடலாம்.
********************************************************************************************************
இலக்கு
அலுவல் களைப்பு உனக்கு.
எனக்கும்தான்.
இருந்தும்
உடைமாற்றும் நிமிடத்தில்
நீளலகு பறவை தலைமேல் வந்தமர்ந்தது
இருள் அப்பிய குகைப் பயணமும்
வௌவால்களின் துர்வாடையும் மீறி
சுகமளித்துக்கொண்டிருந்தன
வழியெங்கும் கீறிக்கிடந்த சித்திரங்கள்
மீண்டும் நம்மை வீடு சேர்த்து
தப்பிதோம் பிழைத்தோமென
பறந்தோடிவிட்டது பறவை
நீ இன்னும் என் முலைச் சுருக்கங்களில் புதைந்திருக்கிறாய்
நினைவில் வந்த பசிக்கு
சில புளித்தக் கனிகளை உண்ணுகிறேன்
நீயும் பசியாறு
பறவை எந்நேரமும் திரும்பலாம்
இம்முறைக்கான இலக்கு உன் தலையாய் இருக்கலாம்.
- அனிதா
நன்றி : குமுதம் தீராநதி
Tuesday, December 04, 2007
சில கவிதைகள்...
துரோகம்
அகால வேளையின்
நம்பிக்கை திரை கிழித்துக்கொண்டு
ஒரு பொய் பிறக்கிறது
பின் மற்றொன்று
மற்றுமொன்று.
பிணவறையின் சவங்களாய்
வரிசையாய் பொய்கள்
குளிர்ந்து
விறைத்து
உணர்வற்று.
சரி நம்புகிறேன்.
இப்பொழுது தள்ளி படு.
யாருமற்ற விடியல்
மார்பும் வயிறும் தொடைகளும்
அதனதன் கனத்தில் அழுந்தியிருக்க
குப்புற கிடந்தது என் உடல்.
உள்தாழிட்ட அறைக்குள் அரைக்கண் மூடிய முகம்
உணர்வுகளற்று வெளிறியிருப்பது
இதுவரை யாருக்கும் தெரியாது.
அதையே உற்றுப் பார்த்து சலித்துப்போனவளாய்
நீரூறி பெருத்த கழிவறை கதவிடுக்கில் நுழைந்து
வென்டிலேட்டர் வழியாய்
பறந்து வெளியேறினேன்.
கூரை வேய்ந்து மழை ஒழுகும் திரையரங்கிலும்
சாவகாசமாய் தெருவோரத் திருநங்கையிடம் பேசிக்கொண்டும்
மரமேறி பெயர் தெரியாத மிருகத்தின்
கடைசி கலவி ரசித்தபடியும் சுற்றி வந்தேன்.
சில மணி நேரங்களில்
பசியில் குழைந்தழைத்த உடலுக்குள் புகுந்து கொண்டு
சமைக்கத் துவங்கினேன்.
சுழற்சி
இது நிகழாதிருக்க வேண்டும்
இம்முறையாவது.
அங்குலம் அங்குலமாய் வெப்பம் பரவி
தீ கனன்று அனல் துவங்கும்
ஐந்து விரல் அனிச்சயாய் மடங்கி
ரேகைக்குள் குழி பறிக்கும்
மரங்கள் மெலிந்து கொடிகளாகி
கொடிகள் வளைந்து நாணலாகும்
வீடு அதிர்ந்து அதிர்ந்து அடங்கும்
தூண்கள் வலுவின்றி சரியத் துவங்கும்
முற்றத்து துளசி மாடம்
சமயம் பார்த்து ஓடி ஒளியும்
எனினும் வீடும் அழியபோவதில்லை
காடும் கருகபோவதில்லை
யாரையும் ஈர்க்கவில்லை எந்த ஒரு நிகழ்வும்
பேருந்து நெரிசலின் சலனம் தாண்டி
சன்னமாய் உதிர்கின்றன
ஒரு குழந்தைக்கான ஆயத்தங்கள்.
- அனிதா
நன்றி : உயிரெழுத்து
அகால வேளையின்
நம்பிக்கை திரை கிழித்துக்கொண்டு
ஒரு பொய் பிறக்கிறது
பின் மற்றொன்று
மற்றுமொன்று.
பிணவறையின் சவங்களாய்
வரிசையாய் பொய்கள்
குளிர்ந்து
விறைத்து
உணர்வற்று.
சரி நம்புகிறேன்.
இப்பொழுது தள்ளி படு.
யாருமற்ற விடியல்
மார்பும் வயிறும் தொடைகளும்
அதனதன் கனத்தில் அழுந்தியிருக்க
குப்புற கிடந்தது என் உடல்.
உள்தாழிட்ட அறைக்குள் அரைக்கண் மூடிய முகம்
உணர்வுகளற்று வெளிறியிருப்பது
இதுவரை யாருக்கும் தெரியாது.
அதையே உற்றுப் பார்த்து சலித்துப்போனவளாய்
நீரூறி பெருத்த கழிவறை கதவிடுக்கில் நுழைந்து
வென்டிலேட்டர் வழியாய்
பறந்து வெளியேறினேன்.
கூரை வேய்ந்து மழை ஒழுகும் திரையரங்கிலும்
சாவகாசமாய் தெருவோரத் திருநங்கையிடம் பேசிக்கொண்டும்
மரமேறி பெயர் தெரியாத மிருகத்தின்
கடைசி கலவி ரசித்தபடியும் சுற்றி வந்தேன்.
சில மணி நேரங்களில்
பசியில் குழைந்தழைத்த உடலுக்குள் புகுந்து கொண்டு
சமைக்கத் துவங்கினேன்.
சுழற்சி
இது நிகழாதிருக்க வேண்டும்
இம்முறையாவது.
அங்குலம் அங்குலமாய் வெப்பம் பரவி
தீ கனன்று அனல் துவங்கும்
ஐந்து விரல் அனிச்சயாய் மடங்கி
ரேகைக்குள் குழி பறிக்கும்
மரங்கள் மெலிந்து கொடிகளாகி
கொடிகள் வளைந்து நாணலாகும்
வீடு அதிர்ந்து அதிர்ந்து அடங்கும்
தூண்கள் வலுவின்றி சரியத் துவங்கும்
முற்றத்து துளசி மாடம்
சமயம் பார்த்து ஓடி ஒளியும்
எனினும் வீடும் அழியபோவதில்லை
காடும் கருகபோவதில்லை
யாரையும் ஈர்க்கவில்லை எந்த ஒரு நிகழ்வும்
பேருந்து நெரிசலின் சலனம் தாண்டி
சன்னமாய் உதிர்கின்றன
ஒரு குழந்தைக்கான ஆயத்தங்கள்.
- அனிதா
நன்றி : உயிரெழுத்து
Subscribe to:
Posts (Atom)