Wednesday, November 14, 2007

எண்ணங்கள்

ஒன்பது மணி அலுவலக வாகனத்தில்
திணிக்கப்பட்ட ஆண் வாடையில்
ஐந்தாவதாய் ஒட்டிக்கொள்ள நான்.

இந்த அரைமணியில்
இருண்ட பனிகாற்றை சுவாசித்தபடி பயணிக்கலாம்
பிடித்த பாடலொன்றை முணுமுணுக்கலாம்
கிழித்தபடி பின்னகரும் கடைதெருவுக்காய் மிர‌ளலாம்

யாரோ பேசும் செல்போனின்
ம‌றுமுனை குரலை உற்று கேட்க‌லாம்
முடிந்துவிட்ட‌ காத‌ல்க‌ளை வெறுமே அசைபோட‌லாம்

இருந்தும்
உண‌ர்வ‌ற்ற‌ தொடை உர‌ச‌லை பொருட்ப‌டுத்திய‌வ‌ள்போல்
என் இருத்த‌லை
வேண்டுமென்றே அசெள‌க‌ரிய‌மாக்கிக் கொள்கிறேன்

ம‌ற்ற‌ மூவ‌ரின் சுவார‌ஸ்யத்திற்காக‌வேனும்.

- அனிதா

நன்றி : புதிய பார்வை

Friday, November 02, 2007

உறுபசி - நாவல்

"சம்பத் இறந்து போன இரண்டு நாட்களுக்கு பிறகு" என அதிரடியாய் துவங்குகிறது உறுபசி நாவல்.
நாவலை வாசிக்கும் நேரம் கல்லூரி நாட்களின் மறக்கப்பட்டிருந்த நண்பர்கள் கண்முன்னே நடமாடிக்கொண்டிருந்தார்கள். நாவல் முடிந்ததும் மீண்டும் தனித்துவிட்ட உணர்வு ஏற்பட்டது.

கதை நெடுகிலும் சம்பத்தும் அவன் நண்பர்களும் வியாபித்திருக்கிறார்கள். இறந்தது சம்பத்தாய் இருப்பினும் மிக வசதியாய் கதைக்குள் நம்மை பொருத்திக்கொள்ள முடிவதால் யாருமே அந்நியமாய் தெரியவில்லை.

நாவல் முழுவதும் மரணம் பனிக்குள் உறைந்த கடலென விரிந்திருக்கிறது.மரணத்திற்கு பின் துவங்கி மரணத்துக்கு பின்னே முடியும் கதையின் முடிவில் வாழ்விற்கான வெளிச்சத்துடன் நிறைத்திருப்பது ஆறுதலாயும் நம்பிக்கை தருவதாகவும் இருக்கிறது.

யாழினியும் ஜெயந்தியும் அழகாய் செதுக்கபட்டிருக்கும் கதாபாத்திரங்கள். யாராவது ஒருவருடன் நிச்சயம் நம்மை பொருத்தி பார்க்க தோன்றும். சம்பத்துடனான இருவரின் உறவை, வெவ்வேறு காலங்களுக்கும் சம்பத்தின் மாறாத அதே மனநிலை வெவ்வேறு விதமாக இருவரையும் எப்படி பாதிக்கிறது என சுலபமாய் ஒப்பிட்டு பார்க்க முடிகிறது. யாழினி மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவளாகவும் ஜெயந்தி சுழலில் சிக்கிய படகெனவும் பிம்பங்கள் உருவாகி வலுப்பெறத்துவங்கும் தருணத்தில் மெல்ல அவை கரைந்தும் போவது சுவாரஸ்யம்.

ஒருவன் மிகுந்த வலிகள் சுமந்து மின்விசிறி பார்த்தபடி நினைவுகளை அசைபோடுவது போல இருக்கிறது நாவல். எஸ். ராமகிருஷ்ணனின் கவித்துவமான நடையும், கதை சொல்லும் விதமும் சாவகாசமாய் யோசித்து உணர்ந்து உண்மைகாளை உள்வாங்கும் பக்குவத்தை உருவாக்கி விடுகிறது.

கதைக்காக படிப்பதானால் உறுபசியில் ஒன்றுமில்லை. கூடவே இருக்கும் மனிதர்களின் உணர்வுகளையும் சுபாவங்களையும் ருசித்து படிக்க விருப்பமிருப்பின், உறுபசி நல்ல அனுபவம்.

நாவல் : உறுபசி (எஸ்.ராமகிருஷ்ணன்)
விலை : ரூபாய் 75.00
பக்கங்கள் : 135
பதிப்பகம் :
உயிர்மை பதிப்பகம்,
11/29 # சுப்ரமண்யன் தெரு,
அபிராமபுரம், சென்னை - 18.

- அனிதா

Monday, October 22, 2007

பத்மப்ரியாவும் சாமியும்.

ஜூனியர் விகடனில் இதைப் பற்றி வாசிக்கும் வரை ஏதோ டைரக்டர் நடிகையை அறைந்த விவகாரம் என்று நினைதிருந்தேன்.
பிறகு தான் வேறு சில விஷயங்களும் தெரிய வந்தன..

டைரக்டர் சாமி மீதான பத்மப்ரியாவின் பாலியல் புகாருக்கு சாமி இப்படி பதிலளித்திருக்கிறார்: "பத்மப்ரியாவை கேமரா க்ளோஸப் பில் பார்த்தபோது அவருக்கு மேலுதட்டிலும் தாடையிலும் ரோமங்கள் இருந்தன. நான் ஷேவ் செய்துகொண்டு வரும்படி சொன்னேன். இப்படி ஆம்பளை போல இருக்கும் பெண்ணை பார்த்தால் எனக்கு செக்ஸ் உணர்ச்சி எதுவும் வரவில்லை" என்கிறார்.

இயக்குனர் சாமிக்கும் இன்னும் இது பற்றி தெரியாத மற்ற ஆசாமிகளுக்கும் சில விஷயங்கள் சொல்ல வேண்டும். இன்று பெரும்பாலான பெண்களுக்கு முகத்தில் பூனை முடிகள் இருப்பது வெகு இயல்பாகி விட்டது. இதை பரிணாம வளர்ச்சி என்றோ, மரபு, ஹார்மோன், வாழ்க்கை முறை, இன்னும் என்ன வேண்டுமானாலும் ஆராயட்டும், முகத்தில் முடி இல்லாத பெண்கள் பார்ப்பது மிக அரிது.

பெண்களுக்கு சில காலம் முன்பு வரை இது பெரும் கூச்சமாகவும் ஏன் குற்ற உணர்ச்சியாகவும் (!) கூட இருந்திருக்கிறது. இப்பொழுதெல்லாம் அப்படி இல்லை. தோழிகளுடன் பேசி, அச்சம், குழப்பங்கள் நீங்கி தெளிவாகி வருகிறார்கள். அழகு நிலையங்களில் நிறைய பிஸினஸ் ஆவது த்ரெட்டிங் (threading) என்னும் முகத்தில் ரோமங்கள் அகற்றும் முறையால் தான். புருவம் திருத்துவதும் இந்த முறையில் தான். ஆபத்தில்லாத, பக்க விளைவுகள் இல்லாத, சீக்கிரம் அகற்ற முடிந்த வழி. இரெண்டு வாரங்களுக்கு ஒரு முறையோ, மாதமொருமுறையோ செய்து கொள்கிறார்கள். இது தவிர வேக்ஸிங் (waxing), எலெக்ட்ராலஸிஸ் (electrolysis), லேஸர் (laser) என்று மற்ற வழிகளும் உள்ளன. அவரவர் வசதிக்கும் தேவைக்கும் ஏற்ப பயன்படுத்திக்கொள்கிறார்கள். இன்றைய நவீன யுகத்தில் இதற்கெல்லாம் வெட்கப்பட தேவையோ, நேரமோ இல்லை.

மகிழ்வான விஷயம் என்னவென்றால் ஆண்களும் இதையெல்லாம் சரியான அர்த்தத்தில் புரிந்து கொள்வது தான். கூட பணிபுரியும் பெண்களையோ, அம்மா மற்றும் சகோதரிகளையோ தினமும் பார்ப்பவர்கள், இது எத்தனை சாதாரணம் என்று கவனித்திருக்கலாம். யாரும் "நீ ஷேவ் செய்யலையா இன்னிக்கு" என்று (நகைச்சுவைக்கு கூட) கேட்பதில்லை. முகத்தில் முடி இருக்கும் பெண்களை காதலிப்பவர்களையும், கைக்குள் வைத்து தாங்கும் கணவர்களையும் பார்த்தபடி தான் இருக்கிறோம்.

பெண்கள் எப்படி இருப்பினும் அழகிகள் தான். மற்றபடி சாமியின் இந்த அருவருக்கதக்க எகத்தாளமான குற்றசாட்டு அவர் மனமுதிற்சியின் அளவை காட்டுகிறது. முகத்தில் முடி இருப்பது தான் அவர் செக்ஸ் உணர்ச்சிகளை தடுக்கவோ தூண்டவோ செய்யுமேயானால் அவர் கடக்க வேண்டிய தொலைவு இன்னும் நிறைய இருக்கிறது.

- அனிதா

Thursday, October 18, 2007

முத்தக்காடு

முத்தங்களாலான கூட்டின் வெம்மைக்குள் சரிந்திருக்கிறேன்

திரைச்சீலை இடுக்கிலிருந்து
முகத்தில் கசியும் அவசர வெளிச்சங்களையும்
பின்னிருக்கை பெண்ணின் வளையல் கனைப்புகளையும்
பொருட்படுத்த நேரமில்லை இப்போது

என் நாசிக்குள் புகுந்துக்கொண்டிருக்கும்
உன் மூச்சின் அடர்த்தியில்
உள்ளங்கையின் நோக்கங்களை தொடர்ந்துபோக
சிரமமாகிவிடுகிறது ஒவ்வொரு முறையும்.

உன் கைக்குள் சுருங்கிகொண்டு
முகமெங்கும் ஈரம் காயாமல்
முத்தங்கள் வாங்கிக்கொண்டிருப்பினும்
என் கீழுதட்டை நோக்கி பயணித்துப் பின்
வழி தவறி கன்னம் சேர்ந்த முதல் முத்தத்தை
வெட்கிச் சிரித்து நினைவுகூறுகின்றன

வழியெல்லாம் படுத்திருக்கும் அத்தனை வேக தடைகளும்.

-அனிதா

Wednesday, October 10, 2007

பெங்களூரு புத்தக கண்காட்சியில் உயிர்மை..

பெங்களூருவில் அக்டோபர் 12 ல் துவங்கி 21 வரை புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. உயிர்மை பதிப்பகமும் இதில் பங்கேற்கிறது.

உயிர்மை பதிப்பகம் கடந்த நான்கு ஆண்டுகளில் கதைகள், நாடகங்கள், கவிதைகள் என பல்வேறு சுவைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது.

நவீன தமிழ் எழுத்தாளர்களான எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாரு நிவேதிதா, கி.ராஜநாராயணன், தியோடர் பாஸ்கரன் மற்றும் பலரின் புத்தகங்களையும் வெளியிட்டிருக்கிறது.
எழுத்தாளர் சுஜாதா அவர்களின் முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் கிடைக்கின்றன.

உயிர்மை பத்திரிக்கையின் ஐம்பதாவது இதழுக்கும், கரிசல் விருது பெற்றமைக்கும், புத்தக கண்காட்சி சிறப்பாய் நடக்கவும் வாழ்த்துகள்!!!


பெங்களூரு புத்தக கண்காட்சி 2007

தேதி: அக்டோபர் 12 லிருந்து 21 வரை
நேரம்: காலை 11 மணியிலிருந்து இரவு 8 மணி வரை
ஸ்டால் எண் : 163
இடம்: PALACE GROUNDS
MEKHRI CIRCLE
RAMANAMAHARISHI ROAD
BANGALORE

உயிர்மையின் புத்தக பட்டியல் விவரங்களை இங்கு காணுங்கள்.

- அனிதா